பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு உதவுவதை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை – இந்தியா

பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை விவகாரத்தில் பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என இந்தியா தெளிவாக கூறிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்துவதில் பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் முழு உதவியையும் பாகிஸ்தான் செய்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட சாதகமான வாய்ப்புகள் உள்ளதாக பாகிஸ்தான் தரப்பு தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு உதவுவதை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை என மீண்டும் தெளிவு படுத்திவிட்டது.

பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை தொடர்பான கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராவீஷ் குமார் பேசுகையில், “பேச்சுவார்த்தை என்பதில் எங்களுடைய நிலைபாடு இப்போதும் தொடர்கிறது. பேச்சுவார்த்தை முன்நோக்கி செல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைபாடு, பேச்சுவார்த்தை நடைபெற உகந்த சூழ்நிலையானது இருக்க வேண்டும். பயங்கரவாதம் இல்லாத மற்றும் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் உதவிசெய்யாத சூழ்நிலையை உருவாக்கவேண்டும்,” என கூறி உள்ளார்.

2016-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் பதன்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியதும், பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-athirvu.com

TAGS: