தமிழகத்தையே உலுக்கிய “அன்பானவர்கள்”.. இவர்கள் அசராதவர்கள்.. யாருக்கும் அடங்காதவர்கள்!

சென்னை: கட்டுக் கட்டான கரன்சிகளால் தமிழகத்தையே திணறடித்த இரு “அன்பு” உள்ளங்களாக உருவெடுத்துள்ளனர், கரூர் அன்புநாதனும், மதுரை அன்புச் செழியனும். மதுரையைச் சேர்ந்தவர் அன்புச் செழியன். இவர் சினிமா படங்களுக்கு கடனுதவி செய்து வருகிறார். இவரிடம் ஏராளமான தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர். சிலர் தற்கொலை செய்துள்ளனர். இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் அசோக் குமார் மரணம் வரை வந்து நிற்கிறது அன்புச் செழியனின் ஆக்டோபஸ் கரங்கள். இவரது தயாரிப்பு நிறுவனத்துக்காக அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருந்தார்.

அசோக்குமார் தற்கொலை

வட்டிக்கு மேல் வட்டி கேட்டதால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த அசோக்குமார், தனது குடும்பத்தினரையும் வீட்டு பெண்களையும் அன்புச்செழியன் தவறாக பேசியதால் மனஉடைந்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

கட்டுக்கட்டாக பணம்

சினிமா துறையில் கடன் என்று யார் வந்து கேட்டாலும் எவ்வளவு தொகையாக இருந்தாலும் கேட்ட சில மணி நேரங்களில் அன்புச்செழியன் கொடுப்பாராம். ஆனால் கடன் வாங்குபவரின் நிலையை அறிந்து கொண்டு அவர்களிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பின்னர் லட்சக்கணக்கான கடனுக்கு கோடிக்கணக்கான சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கி கொள்வார் என்று கூறப்படுகிறது.

அஜீத்தும் பாதிப்பு

அன்புச்செழியனிடம் கடன் பெற்று சிக்கி சின்னாபின்னமானவர்கள் சினிமா துறையில் ஏராளமானோர் உள்ளனர். இவரால் லிங்குசாமி கடுமையாக பாதிக்கப்பட்டாராம். நான் கடவுள் படத்தின் போது அஜீத்தும் கிட்டதட்ட அசோக் குமாரின் மனநிலைக்கு தள்ளப்பட்டதாக இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். மேலும் வீடு முழுக்க பணம் வைத்திருக்கும் அவரது வீட்டுக்கு வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். சினிமா துறையில் அன்புச்செழியனின் ஆட்டம் அதிகரித்து வருவதாகவும் அடங்க மறுக்காமல் ஆடி கொண்டே இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

மற்றொருவர்…

தமிழகத்தில் அன்புச்செழியன் விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இயக்குநர்கள் அமீர், சமுத்திரகனி, சுசீந்தரன் உள்ளிட்டோர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கடன் வாங்கியவர்களின் வீட்டு பெண்களை கண்டபடி பேசுவதை வாடிக்கையாக கொண்டவர் அன்புச்செழியன் என்ற சேதி பகீரென்கிறது. இவரை போல் கட்டுக்கட்டாக பணம் வைத்துக் கொண்டு தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கியவர் கரூர் அன்புநாதன்.

கரூர் அன்புநாதன்

கரூரை சேர்ந்த அன்புநாதன் அதிமுக பிரமுகர்.. அன்புநாதன் வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த ரெய்டில் ரூ.4.80 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் ரூ. 2 கோடி மதிப்புள்ள பட்டு வேட்டி, புடவை, சட்டை பதுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் அன்புநாதன் வீட்டில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரவக்குறிச்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கட்டுக் கட்டாக பணம் பதுக்கியதாக இவர் மீது புகார் கூறப்பட்டது.

உலுக்கியவர்

வீடு முழுவதும் பணம் கொட்டிக் கிடந்ததால் கரூர் அன்புநாதனும், கேட்ட சில மணிநேரத்தில் கோடிக்கணக்கான பணத்தை புரட்டும் சக்தி படைத்த மதுரை அன்புச்செழியனும் தமிழகத்தையே உலுக்கியோர் பட்டியலில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட முக்கியம் இருவருக்குமே அதிமுகவினா் ஆதரவுக் கரம் மிகப் பெரிய அளவில் இருந்தது என்பதுதான்.

tamil.oneindia.com

TAGS: