வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது உண்மைதான்: பென்டகன் அறிவிப்பு..

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது உண்மைதான் என பென்டகன் செய்தி தொடர்பாளர் கலோனல் ராபர்ட் மேனிங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக வடகொரியா பல தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அந்த நாடு பரிசோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து வடகொரியா மீது ஐ.நா. சபை புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைக்கு அமெரிக்கா உரிய விலையை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, வடகொரியா தனது வான்வெளியில் ஏவுகணை சோதனையை நேற்று மீண்டும் நடத்தியது என தென் கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது உண்மைதான் என பென்டகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் கலோனல் ராபர்ட் மேனிங் வெளியிட்ட அறிக்கையில், நேற்று மதியம் 1.30 மணிக்கு வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. ஏவுகணை சோதனை தொடர்பாக மேலும் கூடுதல் விவரங்களை திரட்டி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

-athirvu.com