சிலாங்கூர் பிகேஆர் மகாதிர் நியமனத்தை எதிர்க்கிறது

 

ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மகாதிர் நியமிக்கப்பட்டிருக்கும் முடிவு குறித்து சிலாங்கூர் பிகேஆர் தலைவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் ஹரப்பான் தலைமைத்துவத்தின் நிலைப்பாட்டை மதிக்கும் அதேவேளையில் பிகேஆர் மாநிலப் பிரிவு அதன் எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது என்று சிலாங்கூர் பிகேஆர் தகவல் தலைவர் ஹிஸ்வான் அஹமட் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறுகிறார்.

மகாதிர் நிருவாகத்திற்கு எதிரான போராட்டத்தில் உதித்தது பிகேஆர். அந்த உயர்ந்த வேலைக்கு பிகேஆரைச் சேர்ந்த ஒருவரை நியமிக்காதது பொருத்தமானதாகாது என்கிறார் ஹிஸ்வான்.

நமது நாடு ஒரு புதிய யுகத்தில் இருக்கிறது. இந்தப் புதிய யுகத்தில் அம்னோ மற்றும் பிஎன் ஆகியவற்றின் தவறுகளைத் திருத்தக்கூடிய புதியக் கொள்களைக் கொண்ட புதுமை குன்றாத ஒருவர் தேவைப்படுகிறார்.

மக்கள் மறக்க மாட்டார்கள். சீர்திருத்தவாதிகளும் மறக்க மாட்டார்கள். சீர்திருத்தம் அனைத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று ஹிஸ்வான் கூறுகிறார்.

இருப்பினும், மாநிலத்திற்கு சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் முயற்சியை சிலாங்கூர் பிகேஆர் தொடரும். மேலும், அம்னோவையும் பிஎன்னையும் தோற்கடிக்க அது உழைக்கும் என்றாரவர்.

டாக்டரை மூத்த அமைச்சராக்கலாம்

சிலாங்கூர் பிகேஆரின் துணைத் தலைவர் ஸுரைடா கமாருடின் அதே கருத்தைத் தெரிவித்தார். மகாதிரின் நிருவாகத்திற்கு எதிரான கட்சியின் போராட்டத்தை மறந்து விடக்கூடாது என்றார்.

மகாதிருக்கு எதிராகத் தனிப்பட்டமுறையில் தமக்கு எதிர்ப்பு ஏதும் இல்லை என்று கூறிய அவர், ‘மறுசுழற்சி” செய்யப்பட்ட வேட்பாளரை தாம் ஒப்புகொள்ள முடியாது என்றார்.

மாறாக, மகாதிரை மூத்த அமைச்சராக நியமிக்க நான் முன்மொழிதல் செய்கிறேன் என்று ஸுரைடா மேலும் கூறினார்.