ஜல்லிக்கட்டுக்கு போல உக்கிரமடையும் மாணவர் போராட்டம்- மதுரையில் போலீஸ் தடியடி

மதுரை: ஜல்லிக்கட்டுக்குத் திரண்டு போல பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் மறியல் செய்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெறக்கோரியும் அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து சாலைமறியல், பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் தடியடி

உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெறக்கோரி மதுரை மூலக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

பேருந்து நிலையம் முற்றுகை

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

தருமபுரியில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழக அரசை கண்டித்து பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூரில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து 25ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திரளும் மாணவர்கள்

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராடியது போல பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்தது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த ஆண்டு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: