இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை நீக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்: ரணில்

நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையை இல்லாமல் செய்து ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்ததுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இனங்களுக்கிடையில் அன்று பாரிய பிரச்சனைகள் காணப்பட்டன. முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அதேபோன்று மகாநாயக்க தேரர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்று அனைவருக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது.

நாங்கள் வெள்ளை வானை அனுப்பவில்லை. கொழும்பை எடுத்துக் கொண்டால் எந்த நாளும் ஆர்ப்பாட்டம். ஆனால் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. இந்த சுதந்திரம் கடந்த காலத்தில் காணப்படவில்லை. இன்று தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்ற நிலமை காணப்படுகின்றது.

நாங்கள் பாராளுமன்ற தேர்தலை வென்றது இந்த நாட்டுக்கு சிறந்த பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக, கடந்த ஆட்சிக் காலத்தில் எங்களது பொருளாதாரம் சுமையாக இருந்த காரணத்தினால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

எங்களது நாடு பட்ட கடனை செலுத்துவதற்கு எந்தவித வருமானமும் இல்லாமல் இருந்தது. இப்போது நாட்டின் வருமானம் அதிகரித்து இருக்கின்றது. கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட கடனை செலுத்துவதற்கு வருமான மூலங்களை நாங்கள் தேடி இருக்கின்றோம்.

கடந்த வருடம் எமது நாட்டில் ஆகக் கூடுதலான ஏற்றுமதி வருமானமாக 15 பில்லியன் டொலரை பெற்றுக் கொண்டோம். இந்த நிகழ்வை வைத்து நான் திருப்திப்படவில்லை. அதாவது எங்களுடைய ஏற்றுமதியும், அபிவிருத்தியும் இரண்டு மடங்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

திருகோணமலை துறைமுகத்தை மையப்படுத்தி பொருளாதார மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: