அஸ்மின் : மகாதீர் போட்டியிடவுள்ளார் எனும் வதந்திக்கே ரிம 1.3 பில்லியனா?

இன்று, லங்காவி மேம்பாட்டிற்காக ரிம1.3 பில்லியன் ஒதுக்கீட்டைப் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளதை, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி விமர்சித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரான டாக்டர் மகாதிர் முகமட், மற்ற இடங்களிலும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்க வேண்டும், அப்போதுதான் அங்கெல்லாம் அதிக ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று பிகேஆர் துணைத் தலைவருமான அவர் கிண்டலாகக் கூறியுள்ளார்.

“மகாதீர் லங்காவியில் போட்டியிட விரும்புகிறார் என்று வதந்திகள்தான் பரவியுள்ளன, அதற்குள் லங்காவி மக்களுக்கு ரிம1.3 பில்லியன் ஒதுக்கீடு கிடைத்துவிட்டது. அவர் எப்பேர்பட்ட மனிதர்!” என்று அஸ்மின் அலி, இன்று தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

“மகாதீர் இன்னும் சில இடங்களில் போட்டியிட உள்ளார் என்று அறிவித்தால், அங்குள்ள மக்கள் பல மேம்பாட்டு திட்டங்களை அனுபவிப்பர்,” என்றார் அவர்.

நஜிப் இன்று, லங்காவிக்கு ரிம 1.315 பில்லியன் மதிப்புள்ள 5 புதிய மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்தார்.