சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் – சம்பந்தன்

அனைத்துலக சமூகத்துக்கும், சிறிலங்கா மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, அனைத்துலக  சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினரான  ஜேம்ஸ் சென்சென்பிரென்னர் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், உள்ள  எதிர்க்கட்சி தலைவரின் செயலகத்தில், இரா.சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாகவும்,  அதன் பின்னர் உள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினருக்கு  இரா.சம்பந்தன்,  எடுத்துரைத்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான  நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு சாதகமான முடிவினை எட்ட வேண்டும் என்றும்,  புதிய அரசியலமைப்பானது  கருத்து வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணையை பெற வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஐ.நா  மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தாமதங்களை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கும் சிறிலங்கா மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்ப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

-puthinappalakai.net

TAGS: