ரசிகர்கள் ஏமாற்றம்.. ரஜினிகாந்த் அரசியல் கட்சி இப்போதைக்கு இல்லை!

சென்னை: யாரும் எதிர்பார்க்காத நிலையில் அரசியலில் குதித்த நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்து அவர் முன்னிலையில், தொடங்கி விட்டார்.

அரசியலுக்கு வருவார் என இரு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் இன்னும் கட்சி துவங்காமல் இழுத்தடித்து வருவது தனது திரைப்பட ரிலீசுக்காகத்தானா என்ற ஐயங்கள் எழுந்துள்ளன. ரஜினி நடிப்பில் எந்திரன் 2வது பாகமும், காலா திரைப்படமும் வெளியாக வேண்டியுள்ளது.

படத்திற்காக வெய்ட்டிங்

இவ்வாண்டில் இப்படங்கள் ரிலீஸ் ஆகும். அதற்கு முன்பாக அரசியலில், அதிரடியாக ஏதாவது செய்தால், படங்களுக்கு பாதிப்பு வருமோ என ரஜினிகாந்த் யோசிப்பதாக கூறப்படுகிறது. எனவே, கட்சியை வலுப்படுத்துவதாக கூறியபடி, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தபடி காலம் தாழ்த்தி வருகிறார் ரஜினிகாந்த்.

காலம் கடத்துகிறார்

இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தபோது, கட்சியை வலுப்படுத்துவதான் அவசியம். கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் முக்கியம் என்று, ரஜினிகாந்த் பேசினார். எனவே இப்போதைக்கு கட்சி பெயரை அவர் அறிவிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

கமல் வேகம்

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்று சினிமாவில் பேசிய ரஜினிகாந்த் அரசியலிலும் அதே ஃபார்முலாவை கையாள முயற்சி செய்கிறார். ஆனால், மக்களின் அபிமானத்தை குறுகிய காலத்தில் ஈட்ட முடியுமா என்பது சந்தேகமே. கமல்ஹாசன் களத்தில் இறங்கி வேலை பார்க்க துவங்கிவிட்டார், கட்சியில் ஆள் சேர்ப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. ரஜினியை முடிந்த அளவுக்கு முந்திவிட வேண்டும் என்ற முனைப்பு கமல் கட்சியில் தெரிகிறது.

ரஜினி தாமதம்

அரசியலுக்கு வருவதாக அறிவிப்பதிலேயே வெகுகாலம் கடத்திய, ரஜினிகாந்த், இப்போது கட்சி துவங்குவதிலும் காலம் தாழ்த்துவதாக அதிருப்தியில் உள்ளனர் ரசிகர்கள்.

tamil.oneindia.com