ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 55 பேர் பலி

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன மேலும் நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை இந்த வழக்கத்திற்கு மாறான குளிர் உணரப்பட்டது.

காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது அதில் 21 பேர் போலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். அதில் பெரும்பாலானோர் சாலைகளில் உறங்குபவர்கள்.

ஏழைகள், வீடற்றவர்கள், மற்றும் குடியேறிகள் இந்த மிகப்பெரிய பனிப்புயலால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதியவர்கள், குழந்தைகள், நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர்பான உபாதைகளுக்கு உள்ளாகும் ஆபத்து அதிகமாக உள்ளதாக உலக சுகாதார நி்றுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

அடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளியன்று பனிப்புயல் கடந்து செல்லும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு அயர்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“கடும் பனிப்பொழிவால் உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்களை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இம்மாதிரியான வானிலையில் வெளியே வருவது சரியில்லை” என அவர் தெரிவித்துள்ளார். -BBC_Tamil