வெற்றி பெறுமா ரஜினியின் அரசியல் கணக்கு?

சினிமா வியாபாரத்தில் 1980 முதல் ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் நேரடி போடியாளர்களாக திகழ்ந்தார்கள். இவர்களின் போட்டி பல தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் லாபகரமாக அமைந்தது.

சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தாலும், சினிமாவை தாண்டிய வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களாகவே இருவரும் பழகி வருகின்றனர். பெரிய போட்டியாளர்கள், நல்ல நண்பர்கள் என வலம் வந்த ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் இன்று அரசியல்வாதிகளாக உருவெடுத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிவிட்டர் மூலமாக அரசியல் பதிவுகளை வெளியிட்டுவந்த கமல்ஹாசன், மதுரையில் கடந்த 21ம் தேதி நடந்த முதல் மாநாட்டில் மக்கள் நீதி மய்யம் என்ற தன்னுடைய கட்சி பெயரை அறிவித்துவிட்டார்.

அதோடு அனைவருக்கும் கல்வி, தரமான மருத்துவம், நீர் நிலைகளை உருவாக்கி விவசாயத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை முன்னிறுத்தி பேசிவருகிறார் கமல் ஹாசன். அதோடு தொழில் அதிபர்களை சந்திப்பது, மருத்துவர்களுடன் சந்திப்பு மாணவர்களுடன் சந்திப்பு என பட்டியல் நீளுகிறது. மேலும், தன்னுடைய கட்சியில் சேருமாறு பலருக்கும் வேண்டுகோள் வைத்து வருகிறார். இதன் மூலம் கட்சியை வலுப்படுத்தும் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறார்.

கமல் ஹாசனின் வேலைகளை பார்த்த பலர் வேகமாக செயல்படுகிறார். ஆனால் ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று சொன்னதோடு இருக்கிறது. அதற்கு மேல் ஒன்றும் இல்லை என பலரும் பேசினார்கள். இதற்கு விடை சொல்லும் விதமாக மார்ச் 5ம் தேதி எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து உரை நிகழ்த்தியதில் தன்னுடைய அரசியல் பேச்சை அரங்கேற்றினார் ரஜினிகாந்த்.

கல்லூரி மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் என 7 ஆயிரம் பேர் கலந்து கொண்ட விழாவில் அவரின் பேச்சு வெகு சாமானியரையும் கவர்ந்தது. அவரின் பேச்சு சமூக வலைதள பகுதியில் ஒரு வாரம் ட்ரெண்டிங்கில் இருந்தது.

அரசியல் பேச்சை அரங்கேற்றியதுடன் தன்னுடைய ரஜினி மக்கள் மன்றத்தின் மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பதிலும், கட்சி தொடங்கும்முன் கட்டமைப்பை வலுவாக உருவாக்க வேண்டும் என்பதிலும் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் மற்றும் மாநில நிர்வாகி வி.எம் சுதாகர் தலைமையிலான குழுவினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

அதில் முதல்கட்டமாக மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்யும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதுவரை வேலூர், தூத்துக்குடி, நெல்லை, தேனி, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும், அந்த மாவட்டங்களில் இருக்கும் ஒன்றியம், நகரம், போரூராட்சி போன்றவற்றிருக்கும் நிர்வாகிகளை நியமித்துள்ளனர்.

மேலும் இந்த வாரம் ராமநாதபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆலோசனையில் நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி என அனைத்திற்கும் செயலாளர், இணை செயலாளர், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் பத்து நபர்களை நியமிக்கின்றனர்.

இந்த பத்து பேருக்கும் அவர்களுடைய பகுதியில் இருக்கும் பத்து பூத்களுக்கு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அதாவது ஒரு பகுதியில் 100 பூத்க்கள் இருக்கின்றது என்றால், ஒன்றிய நிர்வாகிகள் தங்களுக்கு தகுந்த பத்து பூத்துகளை தங்களுக்குள்ளாகவே பத்து பத்து பூத்துகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். அந்த பத்து பூத்திற்கு தலா ஒரு “கிளை” என்ற பதவி உருவாக்கப்பட்டுகிறது.

அந்த கிளை பதவிக்கு தலா ஒரு நபர் நியமனம் செய்யப்படுகிறார். அந்த கிளை நிர்வாகிகளுக்கு அந்த ஒன்றிய நிர்வாகி பெறுப்பேற்கிறனர். அதோடு கிளை பதவிக்கு நியமிக்கப்படும் நபர் குறைந்தது 30 உறுப்பினர்களை சேர்க வேண்டும் இதன் மூலம் ஒரு ஒன்றியத்தில் சாதாரணமாக 3000 ஆயிரம் உறுப்பினர்களை ரஜினி மக்கள் மன்றத்தில் இணைய செய்கின்றனர். மேலும் இவர்கள் மூலமாக தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் கிளைகளை உருவாக்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளர். இதன் மூலம் ரஜினி மக்கள் மன்றத்தை வழுவாக கட்டமைக்க முடியும் என்று திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த அடிதளத்தை வலுவடைய செய்துவிட்டால் ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றும் போது வேலை பழு குறைவதோடு, அரசியல் கட்சி அறிவித்தவுடன் அனைத்து வேலைகளையும் எளிதாக செய்து முடிக்க முடியும் என்பது ரஜினிகாந்துடைய எண்ணம்.

எனவே கமல்ஹாசன் கட்சியை தொடங்கிவிட்டு உறுப்பினர்களை சேர்க்க சொல்வது போல் இல்லாமல். முதலில் உறுப்பினர்களை சேர்த்துவிட்டு கட்சியை தொடங்குவது என்ற புது பாதையில் பயணிக்கிறார் ரஜினிகாந்த்.

இதுவரை ரஜினி மக்கள் மன்ற செயலி மூலம் சுமார் 15 லட்சம் பேர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் மூலமாகவும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இதில் முதல்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துகொண்டுள்ளனர் என்று அந்த மாவட்டத்தின் செயலாளர் சோளிங்கர் ரவி கூறுகிறார். அதுவும் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளதாகவும், அதில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவை சரியில்லாத காரணத்தால் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இருந்தாலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் மீண்டும் சரியான தகவல்கள் பெறப்பட்டு மீண்டும் அவர்களை ரஜினி மக்கள் மன்றத்தில் இணைப்பதற்கான வேலைகள் நடப்பதாகவும் கூறுகிறார் சோளிங்கர் ரவி.

மேலும் 13 சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 7 லட்சம் வாக்காளர்களை தங்கள் உறுப்பினர்களாக சேர்பதற்கு வேலூர் மாவட்ட நிர்வாகிகள் செயல்படுவதாகவும் கூறுகிறார்.

வேலூர் மாவட்டத்தை தவிர திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திரு நெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் மூலம் பலாயிரம் பேர் ரஜினி மக்கள் மன்றம் மூலமாக இணைந்துள்ளனர்.

சினிமாவில் வேறு வேறு பாதையில் பயணித்த ரஜினிகாந்த் – கமல்ஹாசன் அரசியல் பாதையிலும் வேறு வேறு பாதையில் பயணிக்கின்றனர். -BBC_Tamil