சிரியா: ஆஃபிரினில் இருந்து குர்துகளை வெளியேற்றிய துருக்கி படைகள்

சிரிய குர்துக்களின் நகரமான ஆஃபிரின் மையத்தை, துருக்கி ஆதரவிலான படைகள் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக கூறிய அவர்கள், அங்கு தங்கள் கொடிகளை ஏந்திச் சென்று, அங்கிருந்த பழப்பெரும் குர்து நபரின் சிலையை தகர்த்தனர்.

பயங்கரவாதிகள் என்று கருதி, எல்லையில் உள்ள குர்து போராளிகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதை இலக்காக வைத்து இரண்டு மாதங்களாக துருக்கி தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இதில் பொதுமக்கள் 280 பேர் உயிரிழந்ததாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதனை துருக்கி மறுத்துள்ளது.

முன்னதாக துருக்கி அதிபர் ரெசப் டாயிப் எர்துகான் கூறுகையில், “சுதந்திர சிரியா ராணுவப் படையினர்… ஆஃபிரின் நகர மையத்தை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்” என்றார்.

அங்குள்ள சுரங்கங்களை அகற்றி, எஞ்சியுள்ள எதிர்ப்பைப் போக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் பலர் தப்பியோடிவிட்டனர். ஆஃபிரின் நகர மையத்தில் பயங்கரவாதிகளின் குடிசைகளுக்கு பதிலாக, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளங்கள் பரவியிருப்பதாகவும் அதிபர் எர்துகான் தெரிவித்தார்.

குர்துகள் இயக்கத்தில் புகழ்பெற்ற நபரான கொல்லர் கவாவின் நினைவுச்சின்னம் புல்டோசர் வைத்து தகர்க்கப்பட்டது. -BBC_Tamil