பிரான்ஸ்: பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர் சுட்டுக்கொலை

பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மூன்று பொதுமக்களை கொன்றதாக சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கிதாரி போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொரோக்கோவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த துப்பாக்கிதாரி, தான் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை நோக்கி இதே நபர் சுட்டதில் போலீஸ் ஒருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகளவிலான ஆயுதங்களுடன் இருந்ததாக கூறப்படும் இந்த தாக்குதல்தாரி, கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13ல் தலைநகர் பாரிஸில் 130 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிருடன் இருக்கும் முக்கியமான சந்தேக நபரான சலாஹ் அப்டேஸ்லாமை விடுவிக்குமாறு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரெஞ்சு உளவுப்பிரிவினர் ஏற்கனவே அறிந்திருந்தனர் என்றும், மேலும் அவருடைய தாயார் நிகழ்விடத்தில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை பிரான்சில் நடந்த முக்கியமான தாக்குதல்கள்

அக்டோபர் 1, 2017 – மார்சே ரயில் நிலையத்தில் இரண்டு பெண்கள் குத்தி கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

ஜூலை 26, 2016 – நார்மண்டியிலுள்ள தேவாலயத்தில் இரண்டு தாக்குதலாளிகள் மதகுரு ஒருவரின் தொண்டையை அறுத்தனர். தாக்குதலாளிகள் இருவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜூலை 14, 2016 – நைஸ் கடற்கரையோர பகுதியில் பாஸ்ட்டீல் தின கொண்டாட்டத்தின்போது, மக்கள் அதிகளவில் குழுமியிருந்த இடத்தில் லாரி ஒன்றை கொண்டு ஏற்றியதில் 86 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது; தாக்குதலாளி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜூன் 13, 2016 – மான்யாங்வில் பகுதியில் போலீஸ் ஒருவரும், அவரது இணையும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனக் கூறிய ஜிகாதி ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டார். பிறகு, அவர் போலீசால் கொல்லப்பட்டார்.

நவம்பர் 13, 2015 – ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஜிகாதிகள் பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடத்திய தாக்குதலில் 130 உயிரிழந்தனர், 350 பேர் காயமுற்றனர்.

ஜனவரி 7-9, 2015 – பிரெஞ்சு மொழி இதழான சார்லி ஹெப்டோவில் இரண்டு இஸ்லாமிய துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த தினங்களில் நடந்த தாக்குதல்களில் ஒரு போலீஸ் உள்பட ஐந்து பேரும், தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டனர். -BBC_Tamil