ஜிஎஸ்டிக்கு எதிரான பாடலுக்காக குவான் எங் விசாரிக்கப்பட்டார்

 

பொருள்கள் மற்றும் சேவைகள் வரிக்கு (ஜிஎஸ்டி) எதிரான பாடலை குழந்தைகளுடன் பாடியதற்காக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இன்று அவரது அலுவலகத்தில் போலீசாரால் விசாரிக்கப்பட்டார்.

அவருடன் அவரது வழக்குரைஞர் ஆர்எஸ்என் ராயரும் இருந்தார்.

விசாரணைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய குவான் எங், போலீசாருக்கு நன்றி கூறினார். அவர்கள் அவர்களுடைய கடமையைச் செய்கின்றனர். இறுதி முடிவு பாரிசான் அரசாங்கத்தின் கையில் இருக்கிறது என்றாரவர்.

ஜிஎஸ்டிக்கு எதிரான ஒரு பாடல் ஒரு பிரச்சனை என்றால், மக்கள் பாட்டின் மூலம் ஜிஎஸ்டிக்கு ஆட்சேபம் தெரிவித்தால், அதற்காக அவர்கள் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டுமென்றால், அடுத்து மக்கள்தான் தங்களுக்கு இதுதான் வேண்டுமா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று குவான் எங் மேலும் கூறினார்.

அவரது இக்கருத்து அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மார்ச் 17 இல், குவான் எங் இப்பாடலை ஒரு அடுக்ககத்தில் பாடிய போது குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

இது குழந்தைகளை மூளைச் சலவை செய்வதாகும் என்று பிஎன் தலைவர்கள் குவான் எங்ஙைச் சாடினர். அங்கு மாநில அரசு ஆதரவிலான இலவச டியூசன் வகுப்பு நடத்தப்படுகிறது.

கூட்டரசுப் பிரதேச அமைச்சார் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கடந்த அக்டோபரில் ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது அம்னோ கொடிகள் போடப்பட்டிருந்ததோடு அம்னோ பாடலும் பாடப்பட்டதை குவான் எங் சுட்டிக் காட்டினார்.