‘இன்னும் சில மணிநேரங்களில் பூமியில் விழுகிறது சீன விண்வெளி நிலையம்’

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் திங்களன்று பூமியில் விழ வாய்ப்புண்டு என்று அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய விண்வெளி முகமை (European Space Agency) கணித்துள்ளதைப் போல இன்னும் சில மணிநேரங்களில் அந்த விண்வெளி நிலையத்தின் பாகம் பூமியில் விழும் என்று சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

கிரீன்விச் நேரப்படி திங்களன்று நள்ளிரவு 12.25 மணிக்கு தியன்கொங்-1 பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழையும் என்று ஐரோப்பிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது. எனினும் ஞாயிறு மதியம் முதல் திங்கள் காலை வரையிலான காலகட்டத்தில் அந்த நேரம் மாறலாம் என்றும் கூறப்பட்டது.

வரும் 2022இல் மனிதர்களைக்கொண்ட விண்வெளி நிலையத்தை விண்ணில் நிறுவும் சீனாவின் லட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியான தியன்கொங்-1 விண்கலம் 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்டதாகும்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஏவப்பட்ட அந்த விண்வெளி நிலையம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனது பணிகளை முடித்துக்கொண்டது.

தியன்கொங்-1 தங்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும், அதை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் 2016ஆம் ஆண்டு சீனா உறுதிப்படுத்தி இருந்தது.

அந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தாலும், அதன் பெரும்பாலான பகுதிகள் மண்ணை அடையும் முன்னரே எரிந்துவிடும் என்றும், அதன் மிகச் சில பாகங்களே பூமியின் மேற்பரப்பைத் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல அந்த விண்வெளி நிலையம் அதிகமான விசையுடன் பூமியில் நுழையாது என்றும், விண் கற்களின் வண்ணமிகு தூரல் போலவே அது வளி மண்டலத்துக்குள் நுழையும் என்றும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். -BBC_Tamil