அண்ணா பல்கலை., துணைவேந்தர்- ஒரு தமிழருக்குக் கூடவா தகுதி இல்லை? அன்புமணி கேள்வி

சென்னை : கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா என்கிற பேராசிரியரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எடுத்திருக்கும் முடிவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சூரப்பா என்பவரை புதிய துணை வேந்தராக நியமிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் பல்வேறு கல்வியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக பலர் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த 170 பேரில் ஒரு தமிழருக்குக்கூடவா தகுதி இல்லாமல் போய்விட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னடருக்கு வாய்ப்பா ?

மேலும் அந்த அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா என்ற பேராசிரியர் நியமிக்கப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. நிர்வாகத்திறன் கொண்ட கல்வியாளர்கள் யாருமே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக் கழகத்தில் திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

காலியாக உள்ள பதவி

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க இருமுறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த நிலையில், மூன்றாவது முயற்சி வெற்றி பெறும்; அண்ணா பல்கலைக்கழகம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கும் வகையில் தொலைநோக்குப் பார்வை கொண்ட தமிழர் ஒருவர் புதிய துணைவேந்தராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சாராத ஒருவர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நியமனம் நியாயமற்றது

புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட உள்ள பேராசிரியர் சூரப்பா கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்குழு செயலாளர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர், பஞ்சாபில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருக்கிறார். அவரது நிறை குறைகள் ஒருபுறமிருக்க, பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழகக் கல்வி நிறுவனத்தின் தலைவராக்கப்படுவது நியாயமற்றது.

தமிழருக்கு தகுதி இல்லையா?

அண்ணா பல்கலைக்கழகம் ஓர் ஆராய்ச்சி நிறுவனம் என்ற அளவில் மட்டும் இருந்திருந்தால், அதன் தலைமைப் பதவிக்கு யாரை நியமித்தாலும் அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. மாறாக அண்ணா பல்கலைக்கழகம் தான் தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் ஒழுங்குபடுத்துகிறது. பிற மாநிலங்களைச் சேர்ந்த எவரும் இதுவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டதில்லை. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 170 பேர் விண்ணப்பித்த நிலையில் அவர்களில் ஒரு தமிழருக்கு கூட துணைவேந்தராக நியமிக்கப்பட தகுதியில்லை என்பதை ஏற்க முடியாது.

வெளி மாநிலத்தவர்கள் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக திணிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியாது. இதற்கு முன் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட சூரிய நாராயண சாஸ்திரியும் தமிழகத்தைச் சாராதவர் தான். அதுமட்டுமின்றி அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சி.வி. ராமுலு, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் வேணுகோபால் ராவ் ஆகிய இருவருமே ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தமிழர்களை நியமிக்க வேண்டும்

இவர்களின் நியமனங்கள் அனைத்தும் இயல்பாக நடந்ததாக கருத முடியாது. இதே போக்குத் தொடர்ந்தால் தமிழக பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே துணை வேந்தராக நியமிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு விடும். இதை தமிழக மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமிக்கும் முடிவை ஆளுநர் கைவிட வேண்டும். துணை வேந்தர்கள் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்களாக தமிழர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் பா.ம.க. சார்பில் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: