ஐபிஎல்லை ஒத்திவையுங்கள், மீறினால் விளையாட்டாக இருக்காது… பாரதிராஜா எச்சரிக்கை!

சென்னை: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகைளை ஒத்திவையுங்கள் மீறி நடத்தினால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது என்று இயக்குநர் பாரதிராஜா எச்சரித்துள்ளார். தமிழா ஐ.பி.எல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி, நிறைய வேண்டியது மைதானத்தின் இருக்கைகள் அல்ல புரட்சியின் மைதானம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டால் போராட்ட கவனம் திசை திரும்பி விடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது மீறி நடத்தினால் மைதானத்தை முற்றுகையிடுவோம், கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நிராகரிப்போம் ஐபிஎல் போட்டியை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் இனத்தை அழித்தார்கள் நாம் எதுவும் பேசவில்லை, நம் மொழியை சிதைக்கிறார்கள் நாம் மவுனமாக இருக்கிறோம். நம் உரிமைகள் பறிக்கப்படும் போதும் போராடாமலே இருக்கிறோம், உறைந்து போய்க்கிடக்கும் நம்முடைய உணர்வுகளை உசுப்பிவிட்டு நம்மைப் புரட்சியாளர்களாய் மாற்ற எத்தனையோ அமைப்புகள் போராடிக்கொண்டிருக்கும் போது ஐபிஎல் எனும் மாய உலகத்திற்கு நம்மை அடிமைப்படுத்தி நம்முடைய தேசியப் புரட்சிக்குத் தீ வைக்கும் முட்டாள்த்தனமான விளையாட்டை நிராகரிப்போம்.

நிறைய வேண்டியது புரட்சியின் மைதானம்

தமிழ் மக்களின் ஒற்றுமை கருக்கூடி வரும்போது கருக்கலைப்பு செய்ய வரும் எந்தவொரு நிகழ்வுக்கும் தடை விதிப்போம். தமிழா ஐபிஎல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி,. நிறைய வேண்டியது விளையாட்டு மைதானத்தின் இருக்கைகள் அல்ல புரட்சியின் மைதானம்.

ஒத்திவையுங்கள்

தமிழனை விளையாட்டாக நினைத்து கிரிக்கெட் விளையாட்டைப் புகுத்தும் மூடர்களே எங்கள் தமிழர்களுக்கு வீரவிளையாட்டும் தெரியும் என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் ஐபிஎல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை கொஞ்சம் ஒத்திவையுங்கள் மீறி நடந்தால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது.

இன உணர்வோடு சொல்கிறேன்

மாறாக எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காளைகளோடு களம் காணுவார்கள். இதனைத் தமிழ் இன உணர்வோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்று பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

tamil.oneindia.com