சிரியாவில் மீண்டும் ரசாயன தாக்குதல்? மூச்சுத்திணறலில் 70 பேர் பலி..

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.

கடந்த ஆண்டில் கிளர்ச்சியாளர்கள் முகாமின் மீது சிரியா நாட்டு விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சுமார் நூறு பேர் உயிரிழந்ததாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது.  இதுதொடர்பாக சர்வதேச மனித உரிமை கமிஷன் விசாரித்து வருகிறது.

சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்துள்ளது.

வாயில் இருந்து நுரை தள்ளியவாறு குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கொத்துக்கொத்தாக செத்துக்கிடக்கும் புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் அந்த முகமை வெளியிட்டுள்ளது.

இந்த பலி எண்ணிக்கை நூறாக உயரக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், மீண்டும் ரசாயன ஆயுதங்களை சிரியா விமானப்படைகள் பயன்படுத்தி இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை சிரியா அரசு மறுத்துள்ளது.

-athirvu.com