அமெரிக்கா: நிர்வாண துப்பாக்கிதாரியால் 4 பேர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் நஷ்வில்லில் உள்ள வோஃபில் ஹவுஸில் நிர்வாணமான துப்பாக்கிதாரி ஒருவர் 4 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி 3:25 மணிக்கு ஹோட்டலுக்குள் நுழைந்த அவர், திடீரென துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார்.

மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். அந்த கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், துப்பாக்கிதாரியுடன் சண்டையிட்டு துப்பாக்கியை பறிக்க முயல, அங்கிருந்து அவர் தப்பியோடினார்.

இல்லினோஸை சேர்ந்த 29 வயதான ட்ராவிஸ் ரீன்கிங் இதனை செய்திருக்கலாம் என்று அடையாளம் கண்டுபிடித்துள்ள போலீஸார், இவரை தேடி வருகின்றனர்.

தனது வண்டியில் அவ்விடத்திற்கு வந்த துப்பாக்கிதாரி, உள்ளே சென்று சுடுவதற்கு முன்பாக, ஹோட்டலுக்கு வெளியேவும் சிலரை சுட்டுள்ளார் என நஷ்வில் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் டான் ஆரொன் தெரிவித்தார்.

அந்த துப்பாக்கிதாரி சுடும்போது பச்சை நிற மேலாடை அணிந்திருந்ததாகவும் பின்பு அதனை கழற்றிவிட்டு நிர்வாணமாக இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ஏ ஆர் 15 ரக துப்பாக்கியை அவர் வைத்திருந்தார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதே மாதிரியான துப்பாக்கிதான், கடந்த அக்டோபர் லாஸ் வேகஸில் நடந்த சம்பவத்திலும், சமீபத்தில் ஃபுளோரிடா பள்ளித் தாக்குதல் சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்டது. -BBC_Tamil