தென் கொரியாவில் திருமணத்துக்கு அஞ்சும் இளைஞர்கள்: சரியும் பிறப்பு விகிதம் -காரணம் என்ன?

பெரும்பாலான கிழக்காசிய நாடுகளில், திருமணம் மற்றும் பிறப்பு விகிதங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. சியோலில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வகுப்பு, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சியோலில் உள்ள டாங்குக் பல்கலைக்கழகத்தில் உள்ள வகுப்பறையில் பேராசிரியை யுன் ஜூ லீ தன் மாணவர்களை கண்ணாடி பாட்டில் ஒன்றை வரையும்படி பணிக்கிறார். அப்புறம் சைக்கிள் வரையும்படி பணிக்கிறார். ஆனால், இது ஓவிய வகுப்பு இல்லை.

உண்மையில் இது “திருமணம் மற்றும் குடும்பம்” என்ற பாடம். சவால் விடும் சமூக பாலின அளவுகோல் குறித்து அவர் வகுப்பு எடுக்கிறார்.

மாணவர்கள் வரையும் விதத்தை வைத்து அவர்களின் பெண்மைத் தன்மை அல்லது ஆண்மைத் தன்மையை அளக்க முடிகிறது என்கிறார். ஒரு பெண் சைக்கிளை முன் பக்கத்திலிருந்து வரையத் தொடங்கினால், அவரிடம் ஆண்மகனுக்குரிய பண்புகள் இருக்கின்றன என்று பொருள்.

இது எதிர்மறையான ஒன்று அல்ல என்று அவர் மாணவர்களுக்கு உறுதியளிக்கிறார். இது அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைப் பண்பு.

அடுத்ததாக லீ மாணவர்களுக்கு சிறுவர்கள் நான்கு சக்கர வண்டிகளை தள்ளுவதையும், சிறுமிகள் பொம்மை கருவிகளையும் வைத்து விளையாடும் படங்களை காட்டுகிறார். இந்த ஐரோப்பிய விளையாட்டு பொம்மை விளம்பரங்கள், ஒரேமாதிரியான பாலின முறைகளுக்கு விடுக்கும் சவால்கள் என்று அவர் கூறுகிறார்.

இந்த வகுப்பு, இளைஞர்களுக்கு தங்கள் உறவுகளை திசையறிய உதவுகிறது. ஒரு வேளை ஒருநாள், அவர்கள் சரியான ஜோடியை தேர்ந்தெடுக்க உதவும். இது தென்கொரியாவில் மிகவும் சிக்கலான விஷயமான இளைஞர்களுக்கு திருமண ஆசை இல்லாமல் இருப்பது, திருமணம் செய்பவர்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் மேற்கொள்ளப்படும் விரிவான நடவடிக்கையாகும்.

பாரம்பரியாமாக பாலின பங்குப் பணிகள் வகித்த தேசத்தில், 1960களில் பொருளாதார வளர்ச்சிக்குப் பின் ஏற்பட்ட மாற்றமாகும்.

சரியும் பிறப்பு விகிதங்கள்

கொரிய பெண்கள் அடிப்படையில் இல்லத்தரசிகள், ஆண்கள் வேலைக்குச் செல்பவர்கள் என்ற ஆழமாக வேர்விட்ட நிலைமையை பாதிக்கும் வகையில் இப்போது இளைஞர்களும் பெண்களும் திருமணம் மற்றும் இல்லறத்தை பார்க்கிறார்கள் என்பதைக் காண வேண்டும்.

2017ல் தென் கொரியாவில் மிகவும் மோசமான குழந்தை பிறப்பு விகிதம் அமைந்தது. ஒரு பெண்ணிற்கு 1.05 குழந்தை வீதம் ஆக இருந்தது. இது மக்கள் தொகையை சீராக வைத்திருக்கத் தேவையான 2.01 என்ற விகிதத்தைவிடக் குறைவு. கடந்த பத்தாண்டில் தேசிய கருத்தரிப்புத் திறனை மேம்படுத்த அரசு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. கருத்தரிப்பு சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்றது, மூன்று குழந்தைகள் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு பொது குழந்தை பராமரிப்பில் முன்னுரிமை வழங்கியது உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்படுத்தியது.

இதேப் போன்ற கருத்தரிப்பு விகித வீழ்ச்சியை கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளான தைவான், ஜப்பான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் காண முடிகிறது.

தென் கொரியாவில் புதிய சொற்றொடர் ஒன்று வழக்கில் இருக்கிறது.- “சம்போ தலைமுறை” என்பது தான் அது. சம்போ என்ற சொல்லுக்கு “மூன்று விஷயத்தை விடுதல்” என்று பொருள். காதலூடாட்டம், திருமணம் மற்றும் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ளுதல்.

இந்த தோற்றம் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை என்கிறார் லீ. இளைஞர்கள் வேலை தேடி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் அவர்கள் மிகவும் குறைந்த வளர்ச்சி கொண்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மைச் சூழலில் பொருளாதார ரீதியாக சுயசார்பு பெறுகிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை, பொருளாதார கவலைகள் திருமணத்தை தவிர்க்க மிகப்பெரிய காரணியாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலானோர், திருமணத்தை அவசியம் என்பதைவிட தவிர்ப்பதை வசதியாக தேர்வு செய்கின்றனர் என்கிறார் அவர்.

பெண்களும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து கவலை கொள்கின்றனர்.

“என்னைச் சுற்றி உள்ளவர்கள் திருமணம் செய்ய விரும்பாததற்கு காரணம், குழந்தை வளர்ப்பதற்கும் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கும் ஏராளமாக செலவாகிறது என்பது தான்” என்கிறார் லீயின் மாணவர்களில் ஒருவரான 24 வயது நிரம்பிய ஜி-வோன்-கிம். “என்னுடைய பெண் தோழிகளுக்கு தாங்களே வீட்டு வாடகை கொடுத்து, தங்களுக்கு வேண்டிய பொருட்களை தாங்களே வாங்கிக் கொண்டு செல்லமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து, டேட்டிங் மட்டும் செய்வது நன்றாக இருப்பதாக கருதுகிறார்கள்”.

‘அழுத்தப்பட்ட நவீனத்துவம்’

பணம் தொடர்புடைய கவலைகளை தீவிரப்படுத்த வேறு காரணிகளும் உள்ளன. “திருமணமாகி குழந்தை பிறந்ததும் உன் வாழ்க்கை மாயமாகிவிடும் என்ற பழமொழி இருக்கிறது” என்று அவர் எச்சரிக்கிறார்.

இன்னொரு மாணவர், 24 வயது நிரம்பிய ஜி-மியோங்-கிம் வாழ்க்கையில் நிம்மதியாக காலூன்ற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவருடைய தற்போதைய பெண் தோழிக்கு அவர் குடும்பத்தினரின் மனப்போக்கு குறித்து மறு உத்தரவாதம் வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறுகிறார்.

கடந்த பத்தாண்டுகளில் புதிதாக திருமணமான கொரிய பெண்கள், தங்கள் குடும்பத்தினரை விட்டு விலகி, தங்கள் கணவர்களின் குடும்பத்தினருடன் அவர்களின் இல்லத்தில் மிகவும் இளைய உறுப்பினராக இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். தன் குடும்பத்தினர் அவ்வாறு எதிர்பார்க்க மாட்டார்கள் என்று கிம் உறுதியளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் குடும்பம் மற்றும் மக்கள் தொகை ஆராய்ச்சிக்கான மையத்தின் இயக்குநரும், பேராசிரியருமான ஜீன் யுங், கொரியாவும் சிங்கப்பூரும் பிரதான பொருளாதார நடவடிக்கைகளை முன்னெட்டிச் செல்லும் துரித மாற்றத்திற்கு உள்ளாகும் ‘அழுத்தப்பட்ட நவீனத்துவத்தை’ பகிர்ந்து கொள்வதாக குறிப்பிடுகிறார்.

“இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் ஐரோப்பாவில் ஒரு நூற்றாண்டிற்குப்பின் ஆசியாவில் ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களுக்குப்பின் நேரிடலாம்” என்று அவர் குறிப்பிடுகிறார். “பல வகையிலும் பொருளாதாரம், கல்வி மற்றும் பெண்களின் பங்கு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வேகமான மாற்றத்தின் வேகத்தை அமைப்புகள் சமூக விதிமுறைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை.”

நவீன குடும்ப தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் கார்ப்பரேட் உலகம்

“வேலை செய்யும் பெண்களுக்கு எவ்வித வசதியும் செய்து தராத கார்ப்பரேட் கலாசாரத்தில் தங்கள் குழந்தைகளை வளர்க்க பல பெண்களும் கவலைப்படுவதில்லை” என்கிறார் லீ.

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகையியல் பேராசிரியர் பீட்டர் மெக்டொனால்டு கூறுகையில், முதலாளிகளுக்கு ஒருவரின் குடும்ப வாழ்க்கை பற்றி எந்த கவலையும் இல்லை என்கிறார். “கிழக்காசியாவில் நீண்ட வேலை நேரம், வேலைக்கு முதல் மற்றும் தலையாய அர்ப்பணிப்பு தான் அனைத்து முதலாளிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது”. என்கிறார்.

பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்க மற்றுமொரு முக்கிய காரணியாக இருக்கக்கூடியது, வீட்டு வேலையில் பகிர்மானத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு. 2015 ஆம் ஆண்டு ஓ.இ.சி.டி. அறிக்கையின் படி, சராசரி கொரிய ஆண்கள் 45 நிமிடம் மட்டுமே வீட்டு வேலைகளை ஒருநாளைக்கு செய்கிறார்கள். இது ஓ.இ.சி.டி.யின் சராசரியைவிட மூன்றில் ஒரு பங்கை விட குறைவு.

டேட்டிங் வாசக பயிற்சி

திருமணம் மற்றும் குடும்ப பாடத்தில், மாணவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். மாணவர்கள் இதை “கட்டாய டேட்டிங் என்கிறார்கள், லீ இதனை “ஜோடி விளையாட்டு” என்கிறார்.

இதில் ஜோடிகள், பின்னாளில் உண்மையான உறவுமுறை ஏற்பட்டால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளக் கூடிய டேட்டிங், கோட்பாடுகள் நிறைந்த திருமணத்தை திட்டமிடல், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுதல், குழந்தை வளர்ப்பு முறைகள், விடுமுறை நாளில் யாருடைய பெற்றோரை முதலில் சந்திக்கச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்ட திருமண ஒப்பந்தத்தை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இதை தவிர அடிப்படை பாலியல் கல்வியையும் அவர்கள் கற்க வேண்டும். மாதவிடாய் பற்றி 20 வயதினருக்கு விளக்குவது, விசித்திரமாக தோன்றலாம். பள்ளிகள் மாணவர்களை கரு உண்டாக வேண்டாம் என்று வலியுறுத்துகிறதே தவிர, பாலியல் தொடர்பான அறிவை வழங்கவில்லை என்கிறார். பாலியல் உறவு பற்றிய நேர்மறையான தகவல்கள் அவர்களுடைய கருத்தரிப்புத்திறனை மேலும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

இது போன்ற அடிப்படைகல்வி, பிறப்பு விகிதத்தை மேலும் உயர்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேசிய கருத்தரிப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நாடுகளும் விதவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை வழங்குகிறது சிங்கப்பூர். ஒவ்வொரு குழந்தைக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. குழந்தையின் பெயரில் பெற்றோர் போடும் முதலீட்டுக்கு இணையாக அரசும் ஊக்கத் தொகை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு 5 வருடங்கள் ஆன நிலையிலும் பிறப்பு விகிதத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை.

கொரியாவும், தனக்கென தனி முன்முயற்சிகளை முயற்சித்தது. 2010ல் சுகாதாரம், நலம் மற்றும் குடும்ப விவகாரத்துறை சியோலில் தன் ஊழியர்களை வாரந்தோறும் புதன் கிழமை சீக்கிரம் தங்கள் வீட்டுக்கு சென்று குடும்பத்துடன் நேரம் செலவிடுமாறு கேட்டுக் கொண்டது. அன்றைய தினத்தை “குடும்ப தினம்” என்று அறிவித்தது.

இரவு 7 மணிக்கு அலுவலக விளக்குகளை அணைத்தும் ஊழியர்களை வீட்டுக்குச் சென்று இனப்பெருக்கம் செய்யவைக்க முடியவில்லை.

“இது போன்ற குறுகிய கால முன் முயற்சிகள், இந்த அரசு அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்பதையும், பாலின பணி மாறுபட்டு இருப்பதையும் உணரவில்லை என்பதையே காட்டுகிறது ” என்கிறார், யுங்.

இதேபோல் மெக்டொனால்டு கூறுகையில் தென் கொரியா தன் கருத்தரிப்பு விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் எவ்வித சமூக மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என்றார். கடந்த காலங்களில் குறைந்த பிறப்பு விகிதத்திற்குக் காரணம் பெண்களே என்று அவர்களை அரசு குற்றம் சாட்டியது. பெண்களின் கருத்தரிப்பு வயதை எட்டிய பெண்கள் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டும் வரைபடம் கொண்ட பிங்க் நிற இணையதளத்தை மக்களின் எதிர்ப்பு காரணமாக நீக்கியது.

இதுபோன்ற தவறாக வழிகாட்டப்பட்ட முன்முயற்சிகள் காரணமாக பெண்கள் மிகவும் குறைந்த கருத்தரிப்பு விகிதப் போக்கிற்கு ஆட்படுத்தப்படுவார்கள் என்கிறார் மெக்டொனால்டு.

வகுப்பறையில் உள்ள மாணவர்களுக்கு இந்த படிப்பு, தங்களைப்பற்றிய புரிதலை மேம்படுத்தவும், குடும்ப வாழ்க்கை குறித்த நேர்மறையான போக்கினை ஏற்படுத்தவும் உதவும்.

“நான் என் பெண் தோழியுடன் உறவாடி வந்தது இயல்பானது என்று நான் நினைத்தேன். என்னுடைய ஆளுமை தேர்வில் தான் நான் மிகவும் ஈர்ப்பு கொண்டவன் என்பதை கண்டறிந்தேன்”. என்கிறார் ஜி-மியோங் கிம். “நான் எதிர்பார்த்ததை விட மிகவும் பழமைவிரும்பியாக இருக்கிறேன்” என்கிறார் அவர்.

மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான ஜோடியை தேட வேண்டாம் என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, தனக்கு எந்த வகையான ஜோடி பொருத்தமாக இருக்கும் என்று கண்டறியக் கற்றுக் கொடுக்கப்படுகிறது” என்கிறார் லீ.

இதன் மூலம் மகிழ்ச்சியான திருமணங்கள், மகிழ்ச்சியான குடும்பங்கள் அமைய வழி பிறக்கும் என்பது அவர் கருத்து. ஆனால் இன்னும் சில மாணவர்களுக்கு அவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை உடைப்பதில் சிரமப்படுகிறார்கள்.

“கவுரவமான பொருளாதார நிலை கொண்டவரை குடும்பத்தாருடன் இணக்கமாக உள்ள, நல்ல குணாதிசியம் மற்றும் அடுத்தவர்களுக்கு அக்கறைப் படுபவரைத்தான் நான் திருமணம் செய்ய வேண்டும் என்று என் தாயார் கூறுகிறார்” ஜீ-வோன் கிம்.

என் தாயார் சில பண்புகளை மற்றவர்கள் மேல் திணிக்கிறார். என்னைப் பொறுத்தவரை பார்ப்பதற்கு அழகாக இருப்பவரைத்தான் பொருளாதார ரீதியாக திடமாக உள்ளவரை விட அதிகம் விரும்புகிறேன்” என்று சொல்லி சிரிக்கிறார் ” என் தாயார் சொல்கிறார், திருமணம் ஆன பின் தோற்றம் பெரிய விஷயமாக இருக்காது”. -BBC_Tamil