வடக்கில் சிங்களக்குடியேற்றம்: கூட்டமைப்பினர் எடுத்துள்ள முடிவு!

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தரவுகளுடன் ஆராய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று முன்தினம் (06.06.2018) நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது.

கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் நடைபெற்று வருகின்ற விடயங்களை தெரிவித்தார், புதிய அரசமைப்புக்கான நகல் வரைவில் எத்தகைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்ற விடயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் குழு தன்னுடன் நடத்திய சந்திப்பு தொடர்பில் இதன் போது தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் தரவுகளுடன் மீண்டும் கூடி ஆராய்வதற்கும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: