கொலைக்கான சூத்திரதாரி மிக முக்கியமானவர், அல்தாந்துயாவின் அப்பா கூறுகிறார்

கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகியின் தந்தை, சேடேவ் ஷாரிபூ, தனது மகள் அல்தாந்தூயாவைக் கொன்றதற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் போலிஸ் கொமாண்டோ சிரூல் அஷ்சார் உமார் பற்றி கவலைப்படவில்லை என்றார்.

மாறாக, தனது மகளைக் கொலை செய்யத் திட்டமிட்டவர் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புவதாக, சேடேவ் கூறினார்.

“சிரூல் பற்றி அல்லது அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

“முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கொலைக்கு உத்தரவிட்டது யார் … சிரூல் இல்லை,” என்று, இன்று கோலாலம்பூரில் நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில் சேடேவ் கூறினார்.

வழக்கு தொடர்பான வேறு சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளதால், அல்தாந்துயாவின் கொலை வழக்கில் மீண்டும் விசாரணை செய்ய சிரூல் முக்கியம் இல்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்கர்ப்பால் சிங் ஒப்புக்கொள்கிறார்.

அக்கொலைக்கு உத்தரவிட்டது யார் என்று போலிசார் ஏற்கனவே அறிந்திருக்கக் கூடும், எனவே அதனை வெளிபடுத்த நீண்ட காலம் எடுக்காது என்றும் அவர் கூறினார்.