சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை படைத்த நாய்

M_Id_369697_Dogமெல்பர்ன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாய், அதிக சத்தத்துடன் குரைத்து, கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின், அடிலெய்டு நகரில் வசிப்பவர் பெலின்டா ப்ரீபெய்ன். இவர், கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த, சார்லி என்ற, ஆறு வயது நாயை வளர்க்கிறார். உலக சாதனை அகடமி நடத்திய, ‘அதிக சத்தத்துடன் குரைக்கும் நாய்’ போட்டியில், சார்லி கலந்து கொண்டது. இப்போட்டியில், 113 டெசிபல் சத்தத்துடன் குரைத்த, இந்நாய் வெற்றி பெற்றது.

இது, ராக் இசை நிகழ்ச்சி மற்றும் இரும்பு ஆலையின் சத்தத்தை விட அதிகம்.மேலும், “உலகிலேயே அதிக சத்தத்துடன் குரைக்கும் நாய்’ என்ற கின்னஸ் சாதனையும், சார்லி படைத்துள்ளது.லண்டன் நகரில் உள்ள, “ஜெர்மன் ஷெப்பர்டு’ வகை நாய், 2009ம் ஆண்டு, 108 டெசிபல் அளவுக்கு, சத்தமாக குரைத்தது, முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை, சார்லி முறியடித்துள்ளது.

“உண்மையில், என் நாய் மிகவும் அமைதியானது. வீட்டில் அடிக்கடி குரைத்து தொல்லை தராது. நான் கட்டளையிட்டால் மட்டுமே குரைக்கும்,” என, நாயின் எஜமானி பெலின்டா தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக, 120 டெசிபல் சத்தம், மனித காதுகளில் வலியை உண்டாக்கக் கூடியது. 160 டெசிபல் சத்தம், செவிப்பறையில் பாதிப்பை ஏற்படுத்தும்.