இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு : இந்திய பிரதமர் உறுதி

புதுடில்லி: இலங்கையில், தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதையே, தான் விரும்புவதாக, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (TNA) பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள், சம்பந்தன் தலைமையில், டில்லியில் நேற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது, அவர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

“இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு, அரசியல் ரீதியிலான தீர்வு காணப்பட வேண்டும்; தமிழர்கள் கண்ணியமாகவும், சுய மரியாதையுடனும் அமைதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும் என்ற நிலையில் இந்தியா உறுதியாக உள்ளது. பல ஆண்டுகளாக தொடரும் தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண, தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு தரும்.” இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

இதன்பின், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:

“தமிழர்கள் பிரச்னைக்கு, அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்காக, ராஜபக்சேஅரசால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்வு குழுவில் இடம் பெறுவது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலனை செய்யும். அதேநேரத்தில், தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, ராஜபக்சே தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.” இவ்வாறு சம்பந்தன் கூறினார்.

இந்திய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பினர், இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவையும் சந்தித்துப் பேசினர்.

TAGS: