பினாங்குக்கு ஒரு ‘ஏஇஎஸ்’: குவான் எங் வாக்குறுதி

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு மக்களுக்கு ஏஇஎஸ் கொண்டுவர உறுதி கூறியுள்ளார்- ஆனால், இந்த ஏஇஎஸ் நினைத்தாலே அஞ்ச வைக்கும் தானியக்க அமலாக்க முறை (Automatic Enforcement System)அல்ல.

அடுத்த ஆண்டுக்கான பினாங்கின் பட்ஜெட்டைத்தான் லிம் அவ்வாறு குறிப்பிட்டார். அது, “Agenda Ekonomi Saksama”(நீதியான பொருளாதாரத் திட்டம்) என்றும் அதையே பினாங்கின் ஏஇஎஸ் என்று சுருக்கமாகக் குறிப்பிடுவதாகவும் அவர் சொன்னார்.

“அந்த (போக்குவரத்துக் கண்காணிப்பு) ஏஇஎஸ் மலேசியர்களின் நன்மை கருதிக் கொண்டுவரப்பட்டதில்லை. அது தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெறுவதற்காகக் கொண்டுவரப்பட்டது.

“நமக்குத் தானியக்க அமலாக்க முறை தேவையில்லை. நீதியான பொருளாதாரத் திட்டம்தான் தேவை. அதுதான் பிஎன்னின் ஏஇஎஸ்-ஸுக்கும் பக்காத்தான் ரக்யாட்டின் ஏஇஎஸ்-ஸுக்குமுள்ள வேறுபாடு”.குவான் எங் நேற்றிரவு கோலாலம்பூரில் கருத்தரங்கம் ஒன்றைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

நவம்பர் 2-இல் பினாங்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஏஇஎஸ் பட்ஜெட் சமத்துமின்மையச் சமப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று முதலமைச்சர் சொன்னார்.

ஏஇஎஸ் எனப்படும் வேகமாக வாகனங்களை ஓட்டிச்செல்வோரைக் கண்காணிக்கும் இந்தப் புதிய போக்குவரத்து முறையை நிறுவுவதில் இரண்டு தனியார் நிறுவனங்கள்-Beta Tegap Sdn Bhd, ATES Sdn Bhd-சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சம்மன் தொகையில் ஒரு பகுதி அவற்றுக்கும் செல்லும் என்றும் தெரியவந்ததை அடுத்து அம்முறை பலத்த குறைகூறலுக்கு இலக்கானது.

பினாங்கில், அது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும்வரை அம்முறை நிறுவப்படுவதை நிறுத்தி வைக்குமாறு இரண்டு ஊராட்சி மன்றங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக லிம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மூன்று நாள் கழித்து கெடாவும் பினாங்கைப் பின்பற்றி அதை நிறுத்தி வைத்தது.

‘சமத்துவமின்மையைச் சரிசெய்ய பக்காத்தான் முன்னுரிமை கொடுக்கிறது’
சமத்துமின்மையைச் சரிசெய்வதற்கு, குறிப்பாக வறியவர்களுக்கு உதவுவதற்கு பக்காத்தான் முன்னுரிமை கொடுக்கிறது என்று லிம் அந்த பட்ஜெட் கருத்தரங்கில் கூறினார்.

பினாங்கு அரசு குறைந்த வருமானம் பெறுவோருக்கு குறைந்த விலை வீடுகளைக் கட்டித்தரவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.

“2008-இலிருந்து 4,000வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 18,000 வீடுகளைக் கட்டுவோம்”.

பக்காதான் நிழல் பட்ஜெட்டும் சமத்துவமின்மையைச் சரிசெய்யும் நோக்கம் கொண்டது என்று கூறிய லிம், அதற்காக அது மூன்று  அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் என்றார்.

ஏகபோக உரிமையை உடைத்து போட்டிக்கு இடமளித்தல், குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவுதல், ஊழலை எதிர்த்தல் ஆகியவையே அம்மூன்று அணுகுமுறைகளாகும்.

TAGS: