எந்த வேலையானாலும்… அது வேலை தான்! (எழுச்சிக் கட்டுரை)

palmoilஎந்த வேலை செய்தாலும், என்ன வேலை செய்தாலும் எல்லாம் வேலை தான்/ சிறிய வேலையோ,  பெரிய வேலையோ எல்லாம்  வேலை தான்.

ஐனூறு சம்பளமோ, ஐயாயிரம் சம்பளமோ, ஐம்பதினாயிரம் சம்பளமோ எல்லாமே வேலை தான். அது அடிமை வேலை தான்! அது கூலி வேலை தான்!

வேலை செய்பவர்களின் பிரச்சனை எல்லாம் ஒன்று தான். ஒருவன் சாராயம் அடிப்பான். ஒருவன் பீர் அடிப்பான். ஒருவன் பிராந்தி அடிப்பான். ஒருவன் காப்பிக்கடையில் குடிப்பான். ஒருவன் ஹோட்டலில் குடிப்பான். ஒருவன் நட்சத்திர ஹோட்டலில் குடிப்பான். இடம் தானே வேறு தவிர இவர்களது பிரச்சனைகள் எல்லாம் ஒன்று தான்.

யாருக்குமே சுதந்திரம் இல்லை! அவரவர் விருப்பத்திற்கு யாரும்  செயல்பட முடியாது! ஐம்பதினாயிரம் வாங்கினாலும் அவரும் அவருக்கு மேலே ஒருவருக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அவருடைய முதலாளியாக அவர் இருக்கலாம்.

எப்படிச் சுற்றிச் சுற்றி வந்தாலும் வேலை என்று ஒன்று வந்துவிட்டால்  ஒரு முதலாளியிடம் தான் நீங்கள் வேலை செய்தாக வேண்டும். அந்த முதாலாளி படிக்காதவராகக் கூட இருக்கலாம்! அவருடைய கல்வித் தகுதியைப் பார்க்கின்ற போது உங்களுக்கு வெட்கமாகக் கூட இருக்கலாம்! ஆனால் அவர் தான் உங்களுக்குச் சம்பளம் போடும் முதலாளி! அவருக்கு நீங்கள் ‘சலாம்’ போட்டுத்தான் ஆக வேண்டும்! அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களை எந்த நேரத்திலும் அவர் துக்கி ஏறியலாம்! அது தான் ஒரு முதலாளிக்கும் உங்களுக்கும்  உள்ள வித்தியாசம்!கெந்திங் ஹைலண்ட்ஸ் கேளிக்கை மையத்தைப் பற்றித்  தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல நாடுகளில் அவர்களின் மையங்கள் இயங்குகின்றன. அதன் நிறுவனர் திரு.கோ அவர்கள் சீன மொழியத் தவிர வேறு மொழிகள் எதனையும் படிக்கத் தெரியாதவர். ஒரளவு மலாய் மொழி பேசத் தெரிந்தவர்.அவ்வளவு தான் அவருடைய  கல்வித்தகுதி! இன்று அவருடைய நிறுவனங்கள் உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் அவருடைய  நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்! உள் நாட்டுப் பட்டதாரிகள் மட்டும் அல்ல. வெளி நாடுகளிலிருந்தும் பல பட்டதாரிகள் அவருடைய நிறுவனங்களில் பணி புரிகின்றனர்.

நிபுணத்துவம் என்பது எளிதாக வாங்கக்கூடிய காலக் கட்டத்தில் நாம் வாழுகிறோம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர். மருத்துவத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவர். ஆனால் அவர் பல டாக்டர்களை வைத்துக்கொண்டு கிளினிக் ஒன்ரை நடத்துகின்றார்! அவர்கள் அனைவரும் ஆங்கில மருத்துவம் கற்றவர்கள். அவர்கள் அனைவரும் டாக்டர்கள். நிபுணத்துவம் என்பது வாங்கக் கூடியது தானே!

வேலை செய்வது தவறு என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால்  சொந்தத் தொழில், சொந்த வியாபாரம், சொந்த நிர்வாகம் அனைத்தும் நமது சொந்த ஆற்றலில் இயங்குகின்றன. நமது ஆற்றல் என்ன என்பதை நமக்குப் புரிய வைக்கின்றன. சொந்தத் தொழில் நமக்குக் கம்பீரத்தைக் கொடுக்கின்றன. தலை நிமிர்ந்து வாழ வைக்கின்றன.

அனைத்துக்கும் மேலாக வருமானத்தையும், வாழ்க்கையில் வளத்தையும் கொடுக்கின்றன!  பணத்தை வைத்துத் தானே இந்த உலகம் ஒரு மனிதனை மதீப்பிடு செய்கிறது!

இன்று இந்த தமிழினம் திட்டம் போட்டே ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கி வைப்பதற்கான காரணத்தை நான் சொல்லவா வேண்டும்? பணம் உள்ளவனிடம் எவனாவது வாய் திறக்க முடியுமா! அவன் வாயை அடைப்பதற்கு பணம் போதுமே!

கையில் பணம் இல்லாதவனை கையாலாகாதவன் என்று ஒர் அடி  முட்டாள் என்ன அறிவில்லாதவன் கூட நினைக்கிறானே! இந்தத் தமிழினத்தோடு கொஞ்சம்  கூட ஒப்பிடமுடியாத அறிவிலிகள் எல்லாம் நம்மைக் கேலி செய்யும் போது நாம் அதனைப் பார்த்து  இரசிக்கவா முடியும்?

பொருளாதாரம் என்று வரும்போது -நம்மைச் சுற்றிப் பார்க்கும் போது – சீனர்கள் தான் நமக்குக் கண்களுக்குத் தெரிகின்றனர்.  சீனர்கள் யாராவது நான் 55 வயது வரை தான் வேலை செய்வேன் என்று அடம் பிடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நாம் தான் அதில் முன்னணியில் நிற்கிறோம்! ஒரு  வயதானச் சீனப் பெண்மணி (வயது 70வதற்கு மேல்) தினசரி பத்திரிக்கைகள் விற்பதைப் நான் பார்த்திருக்கிறேன். ஒரு சீன முதியவர். அவரால் நேரடியாகத் தலை நிமிர்ந்து கூடப் பார்க்க  முடியாது. தலை ஒரு  பக்கம் சாய்ந்து கொண்டிருக்கும். அவர் கடைசி வரைக்கும் அவருடைய தொழிலை விடவில்லை. சாகும் வரையில் அவர்களுடைய தொழிலை அவர்கள் விடுவதில்லை. 55 என்கிற கணக்கெல்லாம் அவர்களிடம் இல்லை! சீனப் பள்ளீகளை நடத்துவதற்கு அவர்களுக்கு யாருடைய உதவியும் ஏன் தேவைப்படவில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். அது தான் வியாபாரத்தின் வலிமை.

என்ன தான் பெரிய சம்பளத்தில் நீங்கள் வேலை  செய்தாலும் உங்களுடைய மாத பட்ஜட் உதைக்கத்தான் செய்யும். நீங்கள் 55  வரை வேலை செய்வீர்கள் என்பதற்கான உத்தரவாதமும் இல்லை.  ஏழாயிரம் வெள்ளி சம்பளம் வாங்கியவன் இரண்டாயிரம் கிடைத்தால் போதும் என்னும் நிலையில் இருப்பதைப் பார்க்கிறேன். 20,000 வெள்ளி சம்பளம் வாங்கியவன் வேலைக்கு விண்ணப்பத்திற்கு மேல் விண்ணப்பம் அனுப்பவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவன் வேலைக் கொடுப்பான்? சீனன் கொடுப்பானா?

ஈரான் ஓர் இஸ்லாமிய நாடு.  அந்த நாட்டில் சுமார் 20,000 யூதர்கள் வாழ்கிறார்கள். அந்த யூதர்கள் பள்ளிக்கூடங்கள் நடத்துகிறார்கள். மருத்துவமனைகள் நடத்துகிறார்கள். அவர்களுக்கு நூலகங்கள் சொந்தமாக இருக்கின்றன. அந்த இஸ்லாமிய நாட்டில்  கூட வியாபாரத்தை அவர்கள்  கையில்  வைத்திருக்கிறார்கள்! ஏன்? உலக அளவில் வியாபாரம் அவர்களது கட்டுப்பாட்டில்.தான் இயங்குகிறது. இன்றைய மாஸ் விமானத்தைத்  தேடும் பணியில் அவர்களது பங்கு அளப்பரியது.

இந்தோனேசிய மக்கள் தொகையில் சீனர்கள் தொகை மூன்று விழுக்காடு மட்டுமே. ஆனால் அந்நாட்டின் பொருளாதாரம் சீனர்கள் வசம்.

பொருளாதாரம் ஓர் ஆற்றல் வாய்ந்த சக்தி. உங்களிடம் அந்தப் பொருளாதார சக்தி இருந்தால் நீங்கள் பேசும் போதே ஓர் ஆற்றல் இருக்கும். மனத்தில் ஒரு தெம்பு இருக்கும்.

மலேசியத் தமிழர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவது என்பது காலத்தின் கட்டாயம்.. இந்த சமுதாயம் ஒரு  சாக்கடை சமுதாயம் என்பதையும் ஒரு குடிகாரச் சமுதாயம் என்பதையும் கேட்டுக்கேட்டு சலித்துப் போய்விட்டது. இனிமேலும் இந்தச் சமுதாயத்தைக் கேலி பேசுவதும், கிண்டலடிப்பதும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

ஒவ்வொரு தமிழனும் ஒரு சிறு தொழிலையாவது செய்ய முயற்சி செய்ய வேண்டும். முதல் இல்லாதவர்கள் காப்புறுதி, நேரடி விற்பனைத் துறைகளில் ஈடுபட வேண்டும். பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும்.

பொருளாதார உயர்வு ஏன் வேண்டும்? நமது மொழி வளர்ச்சிக்குப் பணம் தேவை. தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவ பணம் தேவை. ஒவ்வொரு சிறிய நகரிலும் நல்ல தரமான கோவில்கள் கட்ட பணம் தேவை. ஏழை, எளிவர்களுக்கு உதவ பணம் தேவை. அடையாளக்கார்டு எடுக்கப் பணம் தேவை. அண்டை வீட்டுக்காரர் அபாயத்தில் இருந்தால் அடைக்கலம் தர பணம் தேவை.  அனைத்துக்கும் மேலாக நீங்கள் தலை நிமிர்ந்து வாழ பணம் தேவை!

வேலை! வேலை! என்னும் நினைப்பில் காலம் தள்ளினால் கடைசியில் அரசாங்கத்திடம் தான் பிச்சை எடுக்க வேண்டும்!

வளமான வாழ்க்கை வாழ வியாபாரம் செய்வோம்!

– கோடிசுவரன்