குவான் எங்: பக்கத்தான் சிதறிப் போகக்கூடும்

 

DAP-Guan Eng-Pasபக்கத்தான் கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் பாஸ் கட்சி கூட்டணியின் ஒன்றுபட்ட கொள்கை நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வது பற்றி அவரது கருத்தை இன்று வெளியிட்டார்.

ஹரிராயா கொண்டாட்டங்கள் முடிவுற்ற பின்னர், மலேசியாவில் இரு கட்சி அமைவுமுறை தொடருமா என்பதுதான் மிகப் பெரிய பிரச்சனை என்று அவர் கூறுகிறார்.

கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தை அக்கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்று மதிக்க மறுப்பது பக்கத்தான் ரக்யாட் சிதறிப் போவதற்கு வழிவகுக்கும் என்று அவர் இன்று வெளியிட்ட ஹரியா செய்தில் கூறுகிறார்.

“பக்கத்தான் இல்லாவிட்டால், மலேசியா கட்டுப்பாடற்ற அதிகாரத்திற்கான ஏகபோக உரிமை நிலவிய காலத்திற்கு மீண்டும் திரும்பும்”, என்று குவான் எங் அச்சம் தெரிவித்தார்.

குவான் எங் இரு விவகாரங்களைக் குறிப்பிடுகிறார். சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மந்திரி புசாரை அகற்றுவதற்கு எவ்வித காரணமும் இல்லை என்று இப்போது கூறுவது ஒன்று.

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை மாற்றி அவரிடத்தில் பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயிலை நியமிக்க பக்கத்தான் தலைவர்கள் மன்றம் ஏற்றுக்கொண்டு விட்டது.

ஜூலை 23 இல் நடைபெற்ற அக்கூட்டத்தில் பாஸ் தரப்பில் துணைத் தலைவர் முகம்மட் சாபு, உதவித் தலைவர்கள் துவான் இப்ராகிம் துவான் மான் மற்றும் ஹுசாம் மூசா, தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி, இளைஞர் பிரிவு தலைவர் சுஹய்ஸான் காயாட் மற்றும் மத்திய குழு உறுப்பினர் ஹாட்டா ரமலி ஆகிய அறுவர் பங்கேற்றிருந்தனர்.

மேலும், அக்கூட்டத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் பிகேஆரின் தனிச்சிறப்புரிமை என்ற கோட்பாட்டை பாஸ்சும் டிஎபியும் மறுஉறுதிப்படுத்தின.

இரண்டாவது விவகாரம் பக்கத்தான் கோட்பாடுகளுக்கு எதிர்மாறாக பாஸ் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியதாகும்.