பாதுகாப்பு, அணுசக்தி துறைகளில் இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்பு

ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயுடன், பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோவில் திங்கள்கிழமை (செப்டம்பர் 1) முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருநாடுகளிடையேயும், பாதுகாப்பு, ஆக்கப்பூர்வ அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 நாள்கள் அரசுமுறைப் பயணமாக, ஜப்பானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்றார். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பானின் முன்னாள் தலைநகரான கியோட்டோவில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்கள் அவர் சுற்றுப்பயணம் செய்தார். மோடியின் வருகையையொட்டி, தலைநகர் டோக்கியோவில் இருந்த ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே, கியோட்டோவுக்கு வந்து அவரை நேரில் வரவேற்றார்.

ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை, தலைநகர் டோக்கியோ அல்லாது பிற இடங்களில் இதுபோன்று அந்நாட்டுப் பிரதமர் சந்தித்துப் பேசுவது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்தியாவுடனான உறவுக்கு ஜப்பான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையே ஷின்úஸா அபே இவ்வாறு வெளிப்படுத்தினார்.

பின்னர் கியோட்டோ விருந்தினர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ஷின்úஸா அபே முன்னிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியை திறன் வாய்ந்த நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து கியோட்டோ நகரில் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்தார். டோஜி, கிங்காகுஜி ஆகிய இடங்களில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த புத்தக் கோவில்களுக்கு சென்று மோடி வழிபாடு நடத்தினார். இதில் ஹிந்து மதத்தின் மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட டோஜி கோவிலுக்கு முதலாவதாக மோடி சென்றார். அங்கு, மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயும் வழிபாடு நடத்தினார். மோடியின் வருகையை அறிந்த ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் ஏராளமானோர், இந்திய தேசியக் கொடியுடன் வந்து அவரை வரவேற்றனர்.

கிங்காகுஜி புத்த கோவிலில் வழிபாடு நடத்திய மோடி, அங்குள்ள ஏரி, தோட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஜப்பானிய மக்களுடன் பரஸ்பரம் கைகுலுக்கியதுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

அதனையடுத்து, கியோட்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டெம்செல் ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்று அவர் பார்வையிட்டார். அப்போது, இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களிடையே காணப்படும் ரத்த அணுக்கள் குறைபாடு தொடர்பான நோய் (சிக்கில் செல் அனிமியா) குறித்து எடுத்துரைத்து, அதற்கு தீர்வு காண ஜப்பான் உதவ வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார்.

அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக மோடியிடம் ஜப்பான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதென இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார். அதன்பின்னர் கியோட்டோ சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, டோக்கியோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு, ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயுடன் இருநாடுகளிடையேயான பாதுகாப்பு, பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து திங்கள்கிழமை அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆக்கப்பூர்வ அணுசக்தி, உள்கட்டுமானம், அரிய வகை தாதுப் பொருள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு குறித்தும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருநாடுகள் இடையேயும் பாதுகாப்பு, ஆக்கப்பூர்வ அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே, டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவும், ஜப்பானும் வரலாற்று ரீதியில் மிகவும் ஆழ்ந்த தொடர்பு கொண்டவை. மோடியுடனான விருந்து நிகழ்ச்சி, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. டோக்கியோவில் மீண்டும் அவரை திங்கள்கிழமை சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: