மகாதீர்: ஒரு பெயரை மட்டும்தான் கொடுத்தேன், பிரச்சனையே இல்லை

 

DRM - one nameமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மட் தாம் பதவியிலிருந்த காலத்தில் மந்திரி புசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே அரண்மனையிடம் கொடுத்ததாக கூறினார்.

“என் காலம் முழுவதிலும், அது எப்போதுமே ஒரே ஒரு பெயர்தான். எந்த சுல்தானுடனும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததே இல்லை”, என்று மகாதீரிடம் ஆட்சியாளர்கள் அவரிடம் எப்போதாவது கூடுதல் பெயர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டதுண்டா என்று வினவப்பட்ட போது கூறினார்.

தூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும் மாநில எம்பி “ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” என்றும் அவர் கூறினார்.

“யாரோ ஒருவரிடமிருந்து உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளப் போகும் ஒருவரை நியமிக்க விரும்புகிறீர்களா? என்று வினவிய மகாதீர், தமது எதிர்ப்புக்கும் டாக்டர் வான் அஸிசாவின் பால் பற்றியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

“பெண்களுடன் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, எனது மனைவியும் கூட ஒரு பெண்தான்”, என்று குறும்பாக கூறினார்.

யாரை நியமிக்க வேண்டும் என்பது சுல்தானைப் பொறுத்தது. ஆனால், நியமிக்கப்பட்டவருக்கு பெரும்பான்மை இல்லை என்றால், அந்த நபர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வழி வெளியேற்றப்படலாம் என்று விவரித்த அவர், “அதுதான் நமது அமைவுமுறை”, என்றார்.