சுல்தான் தலையிடவே இல்லை, அரண்மனை சொல்கிறது

salehudinபிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூரின் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்பட்டதற்கான காரணங்களை இன்று அரண்மனை விளக்கியது. எம்பி வேட்பாளர் நியமனத்தில் பக்கத்தான் ரக்யாட் ஒரு வேட்பாளர் மீது உடன்பாடு காண முடியாமல் போனதே ஆட்சியாளர் அஸ்மின் அலியை தேர்வு செய்ய வேண்டியதாயிற்று என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அஸ்மின் அலி அவரது கட்சியின் துணைத் தலைவர் என்பதோடு புதிய எம்பி பிகேஆரிலிருந்து வர வேண்டும் என்பதால் இறுதியில் அவர் தேர்வு செய்யப்பட்டார் என்று சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முனிர் பாணி இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

மாநில நிருவாக விவகாரங்களில் ஆட்சியாளர் தலையிடுகிறார் என்பதையும் அரண்மனை மறுத்தது.

ஒரு எம்பி நியமிக்கப்படுவதில் சுல்தான் அவருடைய “உசிதப்படி செய்யும் உரிமை”யை மட்டுமே பயன்படுத்தினார் என்று முனிர் பாணி கூறினார்.