பௌத்த மயமாக்கலுக்கு துணைபோக மாட்டோம்: தவராசாவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி

vikneswaran111தமிழர்களின் வரலாற்று பொக்கிஷங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப் போவதில்லை. அவ்வாறான பொக்கிஷங்களை பாதுகாப்பதற்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்கும் என வடக்கு முதல்வர் சீ. வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அத்துடன், பௌத்த மயமாக்கலுக்கு துணைபோக மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வடமாகாண சபையின் 18வது அமர்வு நடைபெற்றிருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்- நல்லூர் பகுதியில் உள்ள மந்திரி மனையினை தேசிய மரபுரிமை சொத்தாக கருதி மத்திய அரசின் கீழ் உள்ள தொல்லியல் திணைக்களத்திற்கு வழங்குமாறு தீர்மானம் ஒன்றிணை முன்மொழிந்திருந்தார்.

அதில் குறிப்பாக மந்திரி மனை அமைந்துள்ள பகுதியில் வர்த்தகர் ஒருவர் தனது கனரக வாகனங்களை கொண்டு வந்து விடுவதனால் வரலாற்று சொத்துக்கு பாதகம் உண்டாவதாக கூறியிருந்தார்.

இதனை மறுதலித்த முதலமைச்சர் உங்கள் பிரேரணையினை நான் நிராகரிக்கின்றேன். என கூறியதுடன், வடமாகாண சபைக்கு எங்கள் மரபுரிமை சொத்துக்களை, அடையாளங்களை பாதுகாப்பதற்கு உரித்திருக்கின்றது.

நாங்கள் மேற்படி மந்திரி மனை தொடர்பிலான வரலாற்று ஆவணங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களுக்கு கூறியிருக்கின்றோம். அவர்கள் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் எங்கள் நடவடிக்கையை தொடருவோம்.

குறிப்பாக, அந்த சொத்து தற்போது யாருடைய பெயரில் உள்ளது? அவர்களிடமிருந்து அதனை எவ்வாறு சுவீகரிப்பது? என்பது தொடர்பில் ஆலோசித்து முடிவெடுப்போம்.

அதனைவிடுத்து மத்திய அரசாங்கத்திடம் கொடுத்தால், நாளை அங்கே ஒரு புத்தர் வருவார், பின்னால் காவியுடை போட்டவர்கள் வருவார்கள், அதற்குப் பின்னால் நாங்கள் அங்கே போக முடியாது என கூறிய முதலமைச்சர், நாங்கள் பாதுகாப்போம், அதற்கு எமக்கு உரித்து உள்ளது.

எனவே நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். இதேபோல் வடமாகாணம் முழுவதும் உள்ள மரபுரிமை சொத்துக்களை நாங்களே பார்த்துக் கொள்வோம் என பதிலடி கொடுத்தார்.

இதேவேளை மேற்படி மந்திரி மனையினை குத்தகைக்கு எடுத்திருக்கும் வர்த்தகர், முன்னர் ஈ.பி.டி.பி அமைப்பினருடன் நெருக்கமாக இருந்தவர்.

அவர் பின்னாளில் ஈ.பி.டி.பி அமைப்பின் மணல் கொள்ளைக்கு மாறாக தானும் ஒரு மணல் கொள்ளை நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டார்.

அதனால் தற்போது இரு தரப்புக்குள்ளும் பனிப்போர் நடக்கின்றது. அதன் விளைவாகவே ஈ.பி.டி.பி தவராசாவுக்கு தமிழர்களின் வரலாற்று பொக்கிஷங்கள் மீது பற்று உண்டாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

TAGS: