அன்வாரின் வழக்குரைஞர் விவகாரத்தால் வழக்குரைஞர் மன்றத்துக்கு நெருக்குதல் அதிகரிக்கிறது

khairulகூட்டரசு  நீதிமன்ற முன்னாள்  நீதிபதி  ஒருவர்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்காக  வாதாடுவது  தொடர்பில்  மலேசிய  வழக்குரைஞர்  மன்றம்  தன்  நிலைப்பாட்டைத்  தெளிவாக  தெரிவிக்க  வேண்டும்  என்ற  கோரிக்கை  வலுத்து  வருகிறது.

21  வழக்குரைஞர்களும்  சமூக  ஆர்வலர்களும்  சேர்ந்து  அக்கோரிக்கையை  முன்வைத்துள்ளனர்,  அவர்களில்,  பெர்காசா  முன்னாள்  உதவித்  தலைவர்  சுல்கிப்ளி  நூர்டின்,  தேச  நிந்தனைச்  சட்ட  ஆதரவு  இயக்கத்  தலைவர்  முகம்மட்  கைருல்  அஸாம்  அப்துல்  ஆசிஸ்(வலம்)  ஆகியோரும்  உள்ளிட்டிருந்தனர்.

முன்னாள்  உயர்  நீதிபதிகள்  நீதிமன்றங்களில்  வழக்குரைஞர்களாக  மாறி  வாதாடத்  தடைவிதிக்கும்  தீர்மானத்தை  வழக்குரைஞர்  மன்றம்  ஏற்கனவே  நிறைவேற்றி  இருப்பதை  அவர்கள்  நினைவுறுத்தினர்.

முகம்மட்  கைருல்,  வழக்குரைஞர்  மன்றம்   எதிரணிக்கு  ஆதரவாக  செயல்படுவதாகக் குற்றம்  சுமத்தி  மாற்று  மன்றம்  அமைக்க  வேண்டும்  என்ற  கருத்தை  முன்மொழிந்தவராவார்.

“அன்வார் இப்ராகிம்  சம்பந்தப்பட்டிருக்கிறார்  என்பதால்  வழக்குரைஞர்  மன்றம்  இரண்டு  வகை  கோட்பாடுகளைக்  கொண்டிருப்பது  முறையாகாது. அது  வழக்குரைஞர்  தொழிலுக்கு  இழுக்காகும்”, என்று  அவ்வழக்குரைஞர்கள்  அறிக்கை  ஒன்றில்  கூறினர்.