வித்தியாசமான முறையில் படத்தை அறிமுகம் செய்த படக்குழுவினர்!!!

சந்தோஷ் சிவனின் உதவியாளரும், ‘உறுமி’ படத்தின் வசனகர்த்தாவுமான சசிகுமாரன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ”பப்பரப்பாம்”.

‘நான் மகான் அல்ல’, ‘யாழ்’ படங்களில் நடித்துள்ள வினோத் இதில் நாயகனாக நடிக்கிறார். சதுரங்கவேட்டை இஷாரா, யாமினி, ராஜா, கதிர்கமல், நாய்கள் ஜாக்கிரதை ஜெனிஷ், சூப்பர் சிங்கர் புகழ் அழகேசன் உட்பட இப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கே.எஸ்.ரோஸ். மரணத்திலிருந்து உயிர்த்தெழும் ஒருவனைப் பற்றிய கதையாம் இது. தங்களுடைய படத்தை அறிமுகம் செய்ய புதுமையான ஒரு வழியை கையாண்டிருக்கிறார்கள் படக் குழுவினர்.

அதவாது, நாடு முழுவதிலும் பிரபலமாகி வரும் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் படக் குழுவினர் அனைவரும் தங்களை இணைத்துக்கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட நூறுபேர் கலந்துகொண்டு சென்னை, பட்டினப்பாக்கம் – நொச்சிக்குப்பம் அருகேயுள்ள சாலைகளை முழுவதுமாக சுத்தம் செய்தனர். ”இப்படி சுத்தம் செய்து தங்கள் படத்தை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைப்பதாகவும், இது இத்தோடு நிற்காமல் படம் வெளியாகும் வரை இதே குழுவோடு வேறு வேறு இடங்களில் எங்கள் பணியைத் தொடர்வோம் என்றும் கூறினார் இயக்குனர் சசிகுமாரன்.

நாங்களும் சுத்தம் செய்கிறோம் என்கிற மாதிரி போஸ் கொடுத்துவிட்டு ஓடிவிடாமல் அடிக்கிற வெயிலில் காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்த சுத்தம் செய்யும் பணி மாலை ஆறுமணி வரை குழுவினர் யாரும் கலையாமல் சுத்தம் செய்ததை பார்த்த அந்த ஏரியா மக்களும் அவர்களோடு இணைந்து கொண்டனர். மேலும் அங்கிருந்து போகும்போது ஐம்பது குப்பைத்தொட்டிகளை அந்த சாலையெங்கும் நிரந்தரமாக வைத்தனர் பப்பரப்பாம் படக்குழுவினர். -http://www.dinamani.com