பிரதமர் நஜிப்புக்கு சீனர்களின் ஆதரவு 18 விழுக்காடுதான்

Chinesespurnpmஎதிர்பார்த்தவாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சீனர் சமூகத்தின் அன்புக்குரியவராக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மெர்தேக்கா மையம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் வாக்களித்த சீன சமூகத்தினரில் 18 விழுக்காட்டினர் மட்டுமே அவரின் சேவையில் திருப்தி அடைந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

மொத்தத்தில், அனைத்து இனத்தவர்களில் 39 விழுக்காட்டினர் நாடு நஜிப்பின் தலைமைத்துவத்தில் நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நம்புகின்றனர். ஆனால், 47 விழுக்காட்டினர் நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

இன அடிப்படையிலான அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய கணிப்பில் சீனர்களில்11 விழுக்காட்டினர் மட்டுமே “மகிழ்ச்சி” தெரிவித்தனர்.

மேற்கொள்ளப்பட்ட கணிப்பில் 1,800 பேர் பங்கேற்றனர். அவர்களில் 30 விழுக்காட்டினர் சீனர்கள், 60 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், எஞ்சிய 10 விழுக்காட்டினர் இந்தியர்கள்.

இக்கணிப்பு கடந்த ஜனவரியில் நடத்தப்பட்டது. அதை இம்மாதம் நடத்தி இருந்தால் நஜிப்புக்கான ஆதரவு இன்னும் சரிந்திருக்கக்கூடும். ஏனென்றால், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மலாய்க்காரர்கள் சீன வர்த்தகர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலிருந்து சீனர்கள் அவர்களின் ஆதரவை எதிரணிக்குத் திருப்பியதால் அம்னோ அவர்கள் மீது சினம் கொண்டுள்ளது.

அமைச்சர் இஸ்மாயிலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சீனர் சமூகத்தினால் அம்னோவுக்கு எவ்வித அரசியல் பயனும் இல்லை என்று பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி கூறிக்கொண்டார்.

நஜிப்புக்கான மலாய்க்காரர்களின் ஆதரவு கடந்த ஆண்டு அக்டோபரில் எடுத்த கணிப்பிலிருந்து இந்தக் கணிப்பு வரையில் ஒரே நிலையில் 58 விழுக்காட்டில் நிலைத்து நிற்கிறது.

நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று மலாய்க்காரர்களில் 54 விழுக்காட்டினர் கருதுகின்றனர். இது கடந்த மாதத்தை விட 5 விழுக்காடு கூடுதலாகும்.

மேலும், 52 விழுக்காட்டு மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீது மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது முன்பைவிட 2 விழுக்காடு கூடுதலாகும்.

 

நஜிப்புக்கு இந்தியர்களின் ஆதரவு

 

இந்தக் கணிப்பில் பிரதமர் நஜிப்புக்கு மகிழ்ச்சி அளிப்பது இந்தியர்களின் ஆதரவு. இந்தியர்கள் முன்பு தெரிவித்திருந்த 39 விழுக்காடு ஆதரவு இப்போது சற்று உயர்ந்து 44 விழுக்காட்டை எட்டியுள்ளது.

இருப்பினும், அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த இந்திய சமூகத்தின் கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை, அதே 34 விழுக்காட்டில் நிற்கிறது.

ஆனால், நாடு சரியான பாதையில் செல்கிறதா என்பதில் இந்தியர்களின் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 29 விழுக்காட்டில் இருந்த இந்திய சமூகத்தின் ஆதரவு 26 விழுக்காட்டிற்கு சரிந்துள்ளது.