அன்வார் ஆதரவு பேரணிக்கு ஆதரவு அளியுங்கள்

Anwarrally1மார்ச் 2 சுதந்திரம் பேரணி தொடங்குவதற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கு குறைவான நேரமே இருக்கையில், இந்த பேரணிக்கு ஆதரவு அளித்து அதில் பங்கேற்குமாறு அன்வார் இப்ராகிமின் மகள்கள் மலேசிய மக்களுக்கு இன்று வேண்டுகோள் விடுத்தனர்.

அன்வாரின் மகள்களான நூருல் இமான் மற்றும் நூருல் நுகா ஆகிய இருவரும் “அநீதிக்கு எதிராக குரலெழுப்புங்கள்” என்று மலேசிய மக்களுக்கு விடுத்துள்ள உணர்ச்சி பொங்கிய வேண்டுகோளில் வலியுறுத்தியுள்ளனர்.

“இந்த ஒற்றுமை உணர்ச்சி ஒரு தந்தைக்காக அல்ல, அல்லது அன்வார் இப்ராகிமுக்காக அல்ல. இந்த போராட்டம் ஒரு சிறந்த மலேசியாவுக்காக”, என்று நூருல் இமான் கூறினார்.

சீர்திருத்தம், ஜனநாயகம் மற்றும் நேர்மையான மலேசியா ஆகிவற்றுக்கு குரல் கொடுத்ததற்காக அன்வார் நீதியற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்று நூருல் நுகா கூறினார்.

Anwarrally2“சுதந்திர தாகம் கொண்ட எனது மலேசிய மக்களே, கொடுமை, அநீதி மற்றும் அத்துமீறல் ஆகியவற்றுக்கு எதிராகக் குரலெழுப்புங்கள்; ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்.

“ஒற்றுமை உணர்ச்சியுடன், நல்லதோர் மலேசியாவுக்காக நாம் ஒன்றிணைந்து பேரணியில் செல்வோம்”, என்று நூருல் நுகா கூறினார்.

இப்பேரணி கோலாலம்பூர் சோகோ வாணிப மாலுக்கு வெளியில் மாலை 4.00 லிருந்து நள்ளிரவு வரையில் நடைபெறவிருக்கிறது.

இப்பேரணிக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, சீனா, தைவான் ஆகிய நாடுகளின் பல நகரங்களில் பேரணிகள் இன்று நடத்தப்படும் என்று இப்பேரணிக்கு ஏற்பாடு செய்யும் கித்தா லவான் ஒரு தனிப்பட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது.