மாட் சாபு முகமூடி அணிந்திருந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார்

matsabuarrestedபாஸ் கட்சியின் துனைத் தலைவர் முகமட் சாபு புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவினரால் நள்ளிரவில் செபராங் ஜெயா, பினாங்கில் கைது செய்யப்பட்டார்.

இன்று பின்னேரத்தில், கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் அன்வாரை விடுவிக்கக் கோரும் கித்தா லவான் நிகழ்ச்சியில் மாட் சாபு பங்கேற்பதைத் தவிர்க்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பினாங்கு மாநில பாஸ் கமிஷனர் I முஜாகிட் யுசுப் ராவா இக்கைது சம்பவத்தை உறுதிப்படுத்தினார். பட்டர்வொர்த், சுங்கை டுவாவிலுள்ள செவன் ஸ்டார்ஸ் காப்பிக் கடையில் தாம் முகமட் சாபுவுடன் இருந்த போது போலீசார் அவரை பிடித்துச் சென்றனர் என்று அவர் கூறினார்.

“அவரை கைது செய்யும் போது போலீசார் முகமூடி அணிந்திருந்ததுடன் ஆயுதங்களும் வைத்திருந்தனர்”, என்று முஜாகிட் தொடர்பு கொண்ட போது மலேசியாகினியிடம் கூறினார்.

போலீசார் மாட் சாபுவை கோலாலம்பூருக்கு கொண்டு செல்லக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.