சுல்: பாஸ் 2004 தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

dzulபாஸ்  2004-இல்  செய்த  தவறுகளிலிருந்து  பாடம்  கற்றுக்கொள்ளாவிட்டால் 14வது  பொதுத்  தேர்தலில்  அதன்  நிலை  மோசமாகும்  என  அக்கட்சியின்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  ஒருவர் எச்சரிக்கிறார்.

அந்த  இஸ்லாமியக்  கட்சி  அதன்  பக்கத்தான்  ரக்யாட்  பங்காளிக்  கட்சிகளுடன்  சர்ச்சையிட்டுக்  கொண்டிருப்பது  குறித்து   முன்னாள்  கோலா  சிலாங்கூர்  எம்பி  சுல்கிப்ளி  அஹ்மட்  கவலை  தெரிவித்தார்.

அக்கட்சி  முன்பு  ஊருருவ  முடியாத  இடங்களில்  எல்லாம் 2008-லும்  2013-லும்  ஊடுருவ  முடிந்தது  என்றாரவர்.

“பாஸ் பேராக், மலாக்கா, நெகிரி செம்பிலான்,  ஜோகூர்  போன்ற  மாநிலங்களில்  ஊடுருவ  முடியாதிருந்தது. ஆனால், 2008-லும்  2013-லும்  முடிந்தது. பாஸின்  பலம்  கூடிக்  கொண்டிருக்கிறது. ஆனால், 2004-இல்  செய்த  தவறுகளை  மீண்டும்  செய்யக்  கூடாது.

“பாஸ் பக்கத்தான் கூட்டணியிலேயே  இருந்தால் இப்போது  21 ஆக  உள்ள  நாடாளுமன்ற  இடங்களை  அடுத்த  பொதுத்  தேர்தலில் அது  34 ஆக  அதிகரித்துக் கொள்ள  முடியும்”,

2004-இல் நிகழ்ந்த  தவறுகள் பற்றிக்  குறிப்பிட்ட  சுல்கிப்ளி,  கட்சியின்  உள்சண்டைகளும்  முறையான  விளக்கமின்றி  இஸ்லாமிய  அரசை  அமைப்பதற்கு  நடத்தப்பட்ட  போராட்டமும்தான் பெரிய தவறுகள்  என்றார்.

அது  மலாய்  முஸ்லிம்களிடையே  தனக்குக்  கூடுதல்  ஆதரவைப்  பெற்றுத்தரும்  என  அது  நம்பியது. 1999 பொதுத்  தேர்தலில்  அதற்குக்  கிடைத்த  மிகப்  பெரிய வெற்றிதான் அப்படி  நினைக்க  வைத்தது. ஆனால்,  அந்த  ஆதரவு  அன்வார்  இப்ராகிம்  துணைப் பிரதமர்  பதவியிலிருந்து  தூக்கப்பட்டதால் கிடைத்த  ஆதரவு  என்பதை  அது   உணரவில்லை.

தன்  “சுய-பலத்தை”  அறியாதிருந்ததால் 2004-இல்  11வது  பொதுத்  தேர்தலில் 1999-இல்  பாஸ்  வென்ற  27  நாடாளுமன்ற  தொகுதிகளில்  ஆறை  மட்டுமே  அதனால்  வைத்துக்கொள்ள  முடிந்தது  என்றாரவர்.