சர்வதேச தாதியர் (செவிலியர்) தினம்

nurse “செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்  வானகமும் ஆற்றல் அரிது” எனும் குறளிற்கிணங்க தாதியர்கள் உணர்வோடு ஒன்றி ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே.

ஒரு மருத்துவமனையில் இன்றியமையாத ஊழியர்கள் ‘தாதியர்கள்” என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்.சர்வதேச செவிலியர் அமைப்பு சர்வதேச தாதியர் தினத்தை 1965 ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953 இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதார திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பவர் இத்தினத்தை செவிலியர் தினமாக அறிவிக்க வேண்டுமென விடுத்த அழைப்பை அன்றைய ஜனாதிபதி ஐசன்ஹோவர் நிராகரித்துள்ளார்.

இருப்பினும் 1965 ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இத்தாலியைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே 12 ஆம் நாளை சர்வதேச தாதியர் தினமாக கொண்டாட முடிவு செய்தனர். இங்கிலாந்தில் 1854 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிமியன் போரில் காயமடைந்த இராணுவ வீரர்களை பொறுமையுடன் இரவுப் பொழுதிலும் விளக்கேந்திப் பராமரித்து தாதியர் சேவைக்கு சிறந்த இலக்கணமாகத் திகழ்ந்தவர் இவர். இதனால் தான் “விளக்கேந்திய பெருமாட்டி”| எனும் சிறப்பையும் பெறுகிறார்.

 nurse2இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12 ஆம் நாளில் லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் இந்நாள் சம்பிரதாயபூர்வமாகக் கொண்டாடப்படுகிறது. அங்குள்ள தாதிகள் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர் பீடத்தில் வைக்கப்படும். இந்நிகழ்வானது ஒரு செவிலியரிலிருந்து மற்றொருவருக்கு தமது அறிவு பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது. சாதாரண ஒரு வைத்திய சேவைகளிலிருந்து யுத்த காலத்தின் போதும் அவசர சேவைகள் வரை மனிதர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் உலகெங்கும் வியாபித்துக் காணப்படுகின்றது. பக்குவமாகவும், அதேநேரம் பொறுப்புள்ள முறையிலும் பொறுமையாகவும் இன்முகத்துடனும் அருவருப்பு பாராமல் இவர்கள் நோயாளிகளுக்கு ஆற்றும் தொண்டு சிறப்பானதே. எனவே இன்றைய நாளில் அவர்களின் சிறப்பை நினைவு கூர வேண்டியது மனித சமூகத்தின் கட்டாயக் கடமையாகும். (நன்றி,-பா.ரம்யா.)