பிஏசி அதன் விசாரணையைத் தொடரும்

pacஅடுத்த மாதம்  நடைபெறத்  திட்டமிடப்பட்டிருக்கும்  பொதுக்  கணக்குக்  குழுவின்(பிஏசி)  விசாரணையை  எக்காரணம்  கொண்டும்  தாமதப்படுத்தக்  கூடாது  என  பிஏசி  துணைத்  தலைவர்  டாக்டர்  டான்  செங்  கியாவ் கூறினார்.

இன்று  ஓர்  அறிக்கையில்  இவ்வாறு  உரைத்த  கெப்போங்  எம்பியுமான  டான்,  செவ்வாய்க்கிழமை  தொடங்கி  மூன்று  நாள்களுக்கு  நடைபெறும்  விசாரணை  நியாயமான  முறையிலும்  பிஏசி-யின்  நேர்மையைப்  பாதுகாக்கும்  வகையிலும்  நடத்தப்படும்  என்றார்.

“இது  போன்ற  விசாரணையைத்  தாமதப்படுத்தக்  கூடாது. 1எம்டிபி  பற்றிய  உண்மையை  அறிய  விரும்பும்  மலேசியர்களின்  ஆர்வத்தையும்  நாம்  கவனத்தில்  கொள்ள  வேண்டும்”, என்றாரவர்.

பொதுமக்களின்  நலன்  கருதி  1எம்டிபி  மீதான  விசாரணையைத்  தொடர்வதற்கு  மக்களவைத்  தலைவர் பண்டிகார்  அமின்  மூலியா  அனுமதிக்க  வேண்டும்  என்றும்  டான்  கேட்டுக்கொண்டார்.

அந்த மூன்று  நாள்களில்  1எம்டிபி முன்னாள்  தலைமை  செயல்  அதிகாரிகள்(சிஇஓ)  ஷாருல்  இப்ராகிம்  ஹல்மி,  முகம்மட்  ஹாசெம்  அப்துல்  ரஹ்மான்  ஆகியோரும் நடப்பு சிஇஓ  அருள் கண்ட  கந்தசாமியும்  சாட்சியம் அளிக்க  அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனிடையே, பிஏசி  உறுப்பினரும்  டிஏபி  பிரச்சாரப்  பகுதித்  தலைவருமான  டோனி  புவா, 1எம்டிபி  விசாரணையைத்  தொடர்வதற்கு  பண்டிகாரின்  அனுமதி  தேவையில்லை  என்கிறார்.

“திட்டமிடப்பட்ட  பிஏசி-இன்  விசாரணையில்  தலையிட  யாருக்கும்  அதிகாரம்  இல்லை”, என  புவா  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.

பிஏசி  தலைவர்  கலந்துகொள்ள  முடியாதபோது  புதிய  தலைவர் ஒருவரை  நியமிக்க நிலை ஆணைகள் இடமளிப்பதாக  அவர்  சொன்னார்.

“பிஏசி  சட்டப்பூர்வமானது”, என்று  குறிப்பிட்ட  புவா, சாட்சிகள் கண்டிப்பாக  விசாரணைக்கு  வர வேண்டும்  என்பதையும்  வலியுறுத்தினார்.