தமிழக மக்களின் தலைவிதி 110… திசைதிருப்பும் டிவி சீரியல்கள்.. அன்புமணி சாடல்

anbumani-ramad-600டிவி சீரியல்கள், ஊழல்களையும், நாட்டின் அவலங்களையும், திசை திருப்பி வருகிறது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபையில், இதுவரை, 500 முறை, 110 விதியில் அறிவித்த திட்டங்களில், வெறும், 3 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால், ‘110’ சட்டசபை விதியல்ல; அது தமிழக மக்களின் தலைவிதி,”என, பா.ம.க., அன்புமணி சாடியுள்ளார். சேலத்தில், பா.ம.க., சார்பில், தமிழக அரசியல் மாற்றத்துக்கான மாணவர்கள் மாநாட்டில் பேசிய அன்புமணி, அரை நூற்றாண்டாக ஆட்சி செய்யும், திராவிட கட்சிகள், நாட்டையே நாசப்படுத்தி விட்டன. இதேநிலை, இன்னொரு நாட்டில் ஏற்பட்டிருந்தால், புரட்சி ஏற்பட்டிருக்கும்.

டிவி சீரியல்கள், ஊழல்களையும், நாட்டின் அவலங்களையும், திசை திருப்பி வருகிறது. கருணாநிதி, 1971ல், சாராய கலாச்சாரத்தை துவக்கி வைத்தார். இப்போது, மது அருந்தும் வயது, 13 ஆக குறைந்துவிட்டது.

பூரண மதுவிலக்கு கோரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ரட்சகனாக இருந்து, 30 ஆண்டாக போராடி வருகிறார். ஒரு கட்சி தலைவருக்கு சொந்தமான இடத்தில், எட்டு ஆண்டாக மதுக்கடை இருந்துள்ளது. அது, தனக்கு, அவமானம் எனக்கூறி, அவர், திடீரென போராட்டம் நடத்துவது சந்தர்ப்ப சூழலால் உருவான போராட்டம். விஜயகாந்த் உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு, பூரண மதுவிலக்கு போராட்டம், தீவிரமடைந்திருப்பது, பா.ம.க.,வுக்கு கிடைத்த முதல் வெற்றி.

உச்சநீதிமன்றம் மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, 600 மதுக்கடைகளை, பா.ம.க., சத்தமின்றி மூடி உள்ளது. அதேபோல, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள, 1,200 மதுக்கடைகளை மூடும் வழக்கு, உச்சநீதிமன்றத்தில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

முதல்வராக, எனக்கு, ஐந்தாண்டு வாய்ப்பு கொடுங்கள். முதல் நாள், முதல் கையெழுத்தே பூரண மதுவிலக்கு தான். மக்கள் சென்று சந்திக்கும் முதல்வரை விட, மக்களை சந்திக்கும் முதல்வர் நமக்கு தேவை.

தற்போது கருத்து கணிப்புக்கு என்ன அவசியம். 5.64 கோடி வாக்காளர்களில், வெறும், 3,300 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்களிடம், மதுவிலக்கு பற்றி கேட்கவே இல்லையாம். ஆரம்பத்தில், ஸ்டாலின், அழகிரி இடையே பிரச்னை. அப்போது, கருத்து கணிப்பு வெளியிட்டனர். இப்போது, ஸ்டாலின், கருணாநிதி இடையே பிரச்னை. இப்போது ஒரு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, பின்னணயில் யார் இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதுவரை, சட்டசபையில், 500 முறை, 110 விதியில் அறிவித்த திட்டங்களில், வெறும், 3 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. 110 என்பது சட்டசபை விதியல்ல; தமிழக மக்களின் தலைவிதி. நீங்கள், மாற்றத்தை கொடுங்கள். நான், முன்னேற்றத்தை தருகிறேன் என்று கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

சினிமாவும், நடிகர்களும் தமிழக மக்களை பாழாக்கி வருகின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது டிவி சீரியல்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். முதல்வர் வேட்பாளர் அன்புமணி. அப்போ மக்கள் டிவியில் போடும் சீரியல்களை நிறுத்தச் சொல்வாரா அன்புமணி என்கின்றனர் சீரியல்களை ரசிக்கும் இல்லத்தரசிகள்.

TAGS: