நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தேனி பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு

Seemanவருகின்ற சட்ட சபை தேர்தலில் நாம் தமிழர்  கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று தேனியில் நடத்தியது நாம் தமிழர் கட்சி. கட்சியின் ஒருங்கிணைப்பாளாரான சீமான், 130 கோடி நாடுகளில் வசிக்கும் தமிழனுக்கு, தனியாக வாழ ஒரு நாடு இல்லாமல் இருக்கிறோம். இந்த நிலைமை இதுவரை நம் இனத்தின் தலைவன் ஒருவன் நம்மை ஆளாததே காரணம்.

வெள்ளையர்களிடமிருந்து நாட்டை காக்க போராடிய நல்லகண்ணு, இன்று கொள்ளையர்களிடமிருந்து நாட்டையும், தாமிரபரணி ஆற்றையும் காப்பாற்ற நம்மோடு இணைந்திருக்கிறார். அவரை நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம்? கட்சத்தீவு எப்போதும் இந்தியாவுடன் இருந்ததில்லை என சொன்ன காங்கிரஸ், உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தபோது கொடுத்தது கொடுத்தது தான்” என்றது. உங்களிடம் இல்லாததை எப்படி அவர்களுக்கு கொடுப்பீர்கள்? நான் முதல்வரானால், கச்ச தீவை திருப்பிக்கொடு, இல்லையேல் எங்களை வெட்டி விடு “ என்பேன்.

யாராவது எங்களை பிரிவினைவாதியென்றால், இருந்ததை கொடுத்தவன் தேசியவாதி, அதனை கேட்பவன் பிரிவினைவாதியா? என கேட்டவனை செருப்பால் அடிப்பேன். நாட்டின் பிரதமாராக இருப்பவர் மேக் இன் இண்டியா, மேட் இன் இண்டியா, டிஜிட்டல் இண்டியா, கிளீன் இன் இண்டியா என அவர் சொல்லும் எல்லாவற்றிலும் இன்டியா இருக்கிறது. ஆனால் அவர்தான் இந்தியாவில் இல்லை.

நான் முதல்வரானால் பாண்டியன் – பொன்னம்பலாரில் அணையை கட்டுவேன். எங்களுக்கு வர வேண்டிய தண்ணீரை தாருங்கள் என கேரளத்தினர் கேட்டால், முல்லை பெரியாறில் எங்களுக்கு வர வேண்டிய தண்ணீரை கொடு என்று கேட்பேன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் மத்திய, மாநில அமைச்சர்களின் கொள்ளையடித்த பணத்தை வாங்கி மதுரை, தேனி, மாவட்டங்களில் 500 ஏக்கரில் ஏரி அமைப்பேன். அதற்கான தண்ணீருக்கு நீர்பாதைகளை உருவாக்குவேன். வேளாண்மையை தேசிய தொழிலாளாகவும், கம்பு, சோளம், குதிரைவாலியை  தேசியப்பயிர்களாகவும், விவசாய தொழில் செய்து அறுபது வயதை கடந்த  முதியவர்களுக்கு  உதவித்தொகை வழங்குவேன். பனை மரங்களை பெருக்கும் வகையில் பல கோடி பணைதிட்டம், மண்பானை தொழிற்சாலை,  நெசவு வேலையை  அரசு வேலையாக்குதல்,  ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குவேன். ஆடு, மாடு, தேனீ வளர்க்காமல் எப்படி பொருளாதாரம் மேம்பாடு அடையும்?

தனியார் பள்ளி, கல்லூரி மருத்துவ மனையில் பணிபுரியும் ஊழியர்களை விட அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வாக தரப்படும். எம்.எல்.ஏ, எம்.பி, ஆசிரியர் ஆகியோரின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்க வேண்டும்.

அனைவருக்கும் கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக கொடுத்து, தடையற்ற மின்சாரத்தை கொடுப்பேன். எங்களுடைய ஆட்சியில் வாக்காளர் அடையாள அட்டை தேவையில்லை. வாக்கு செலுத்தியதற்கான சீட்டு தான் அவசியம். அவர்களுக்கு  கல்வி, மருத்துவம், ரேசன் பொருட்கள் எல்லாம் கிடைப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இன விடுதலை ஒன்றையே இலக்காக கொண்டு நாங்கள் போராடி வருகிறோம என்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக  போடி தொகுதிக்கு அன்பழகனையும், கம்பம் தொகுதிக்கு ஜெயபாலையும், ஆண்டிபட்டி தொகுதிக்கு தம்பி ஆனந்தனையும் அறிவித்தார்.

– சக்தி.

-http://www.nakkheeran.in

TAGS: