ஆக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மின்சாரம் கிடைத்தது!

Acob Group1நாடு விடுதலையடைந்தும், பள்ளி தொடங்கப்பட்டும் 96 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் நிரந்தர மின்சாரம் இல்லாமல் இயங்கி வந்த ஆக்கோப் தமிழ்ப்பள்ளிக்குத் தற்போதுதான் தெனாகா நேசனலின் நேரடி மின்சாரம் கிடைத்துள்ளதாக அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் இரா. சாந்தகுமாரி கூறினார்.

திங்கள்கிழமை காலை (23.5.2016) காப்பார் அருகில் இருக்கும், ஜாலான் ஆக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இது சார்பாக நடைபெற்ற ஒரு நன்றி கூறும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பள்ளியின் மின்சாரம் சார்பாகப் பலமுறை முயன்றும் பலன் அளிக்கவில்லை என்றார். “பள்ளி இன்னமும் தோட்ட நிர்வாகத்தின் நிலத்தில் இருப்பதால், தோட்ட நிர்வாகம் கொடுக்கும் குறைந்த அளவுள்ள மின்சாரம் போதுமானதாகவும் இல்லை, நிரந்தரமற்ற நிலையில் விட்டுவிட்டுத்தான் கிடைக்கும்” என்றார்.

Acob HM1இன்று இந்தப் பிரச்சனையைப் பள்ளி மேலாளர் வாரியம் தீர்த்துள்ளது என்று கூறிய சாந்தகுமாரி, இதற்கு முக்கியப் பங்காற்றியவர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், பள்ளி மேலாளர் வாரியத்தை அமைத்தவருமான கா. ஆறுமுகம்தான் என்கிறார். அவருக்கு இப்பள்ளி கடமைப்பட்டுள்ளது என்று உணர்வுப்பூர்வமாகக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வழக்கறிஞருமான ஆறுமுகம், நிரந்தர மின்சாரம் அற்ற நிலையில் பள்ளி இயங்குவது ஒரு வருந்தத்தக்க சூழலாகும் என்றார். பள்ளி இன்னமும் சைம் டார்பி தோட்ட நிர்வாகத்தின் செம்பனை தோட்டத்தில் உள்ளதால் உருவான இந்தச் சிக்கலை நிவர்த்தி செய்வதற்கு ஒரு துணை மின்நிலையம் வேண்டும். இதைப் பள்ளியில் கட்டுவதற்குப்  பல தரப்பினரின் ஒத்துழைப்பு தேவைப்பட்டதாகக் கூறினார். சைம் டார்பி, பொதுப்பணித் துறை, கல்வி அமைச்சு, நகராண்மை கழகம், தெனகா நேசனல்  இப்படிப் பல தரப்பினரின் அனுமதியும் அதன் பிறகு நிதியும் வேண்டும் என்றார்.

Aru & Dato Mohandass1இதில் கிள்ளான் மேரு தெனகா நேசனல் கிளை சிறப்பான சேவையை வழங்கியது என்றார். அதற்குப் பராட்டு தெருவிக்கும் பொருட்டு அதன் முக்கிய நிர்வாகி சைனால் அபிடின் மற்றும் பல வகையில் ஆதரவு நல்கிய தெனகா நேசனலின் மேல்நிலை அதிகாரி டத்தோ மோகனதாஸ் அவர்களும் பள்ளியில் புதிதாக அமைந்துள்ள துணை மின்நிலையத்தைத் திறந்து வைக்க அழைக்கப்பட்டனர் என்றார் ஆறுமுகம்.

இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட வகையில் லியோபாட் கேர் (LEOPAD CARE) அமைப்பின் உரிமையாளர் ஜெகா அவர்கள் ரிம 10, 000 கொடுத்ததையும் நினைவு கூர்ந்த ஆறுமுகம், கிள்ளான் வட்டாரத்தைச் சார்ந்த ஆர்.ஆர்.ஜி மெர்கண்டைல் நிறுவனத்தின் உரிமையாளர் இராமச்சந்திரன் அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரையில் உடன்நின்று செயல்பட்டதைப் பராட்டினார்.

மேலும் நன்றி கூறுகையில், தம்முடன் அயராது உழைக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சூரியன் மற்றும் முன்னாள் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் இலா. சேகரன், கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் மணிவண்ணன் அவர்களுக்கும், நண்பர் சிங்காரவேலு மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்த ஆறுமுகம், இறுதியாக,  “பள்ளிக்கு மின்சாரம் கிடைத்ததில் நமக்கு ஒரு பிரகாசமான சூழல் உருவாகும், அதே பிரகாசமான மாற்றத்தைப் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு குழந்தையிடமும் உருவாக்க நாம் உழைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.