என்னைக் குறை சொல்வோரைக் கைது செய்யாதீர்: போலீசுக்கு ஜோகூர் பட்டத்திளவரசர் கோரிக்கை

crownஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் தம்மை யாரேனும் குறை சொன்னால் அவர்களைக் கைது செய்ய வேண்டாம் என்று போலீசாரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“என்னை நிந்தித்துக் கருத்துரைப்போரைக் கைது செய்ய வேண்டாம் எனப் போலீசாரைப் பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்”, என துங்கு இஸ்மாயில் நேற்றிரவு ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த நேர்காணலில் கூறியிருந்தார்.

மாறாக, தம்மைக் குறைசொல்வோரை நேருக்கு நேர் சந்திப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வதையே ஜோகூர் டாருல் தக்சிம் கால்பந்துக் குழுவின் உரிமையாளரான துங்கு இஸ்மாயில் விரும்புகிறார்.

“அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்களோ அதை என் முகத்துக்கு நேராகச் சொல்லும் வாய்ப்பை அவர்களுக்குக் கொடுப்போம்”, என்றாரவர்.

சமூக வலைத்தளங்களில் பட்டத்திளவரசரை இழிவுபடுத்திப் பதிவிட்ட இருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த செய்தி க்கு எதிர்வினை ஆற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.