கேங்ஸ்டரிஸத்தில் 40க்குள் கொன்று விடுவார்கள்: கபாலி பார்த்து மனம் திருந்தினாரா மலேசிய கேங்ஸ்டர்?

kabali-poster-2கோலாலம்பூர்: ரஜினியின் நடிப்பில் வெளியான கபாலி உலக அளவில் வசூல் சாதனைகளை படைத்துள்ளது. 700 கோடி வசூலைக் கடந்து 1000 கோடியை எட்டுமா என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.

கதைக்களம் அமைந்த மலேசியாவில் கபாலி திரைப்படம் பாஸிட்டிவான விவாதங்களை உருவாக்கி உள்ளது. இளம் தலைமுறையினரிடம், தங்களது முன்னோர்களின் தியாக வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஏழ்மையில் இருந்து மீள்வதற்கு கேங்க்ஸ்டரிஸம் ஒன்று தான் வழியா என்ற கேள்விகளையும் இளைய தலைமுறையினரிடம் எழுப்பி உள்ளது.

இந்நிலையில் மலேசிய கேங்ஸ்டர் பேசியுள்ளதாக ஒரு வீடியோ யூ.டியூபில் வலம் வருகிறது. தன்னை சட்டைக்காரன் என்று குறிப்பிடும் அவர், முருகையாண்ணன் என்பவருக்கு தனது மறுப்புக் கருத்தாக இந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

சீனர்கள் தலைமையில் 49 கேங்ஸ்டரிஸம்

கபாலி திரைப்படம் உங்களுக்கு எப்படி கண்ணில் தெரிந்ததோ இல்லையோ, எனக்கு ஒரு பாஸிட்டிவ் வியூ தான். நான் ஒரு சட்டைக்காரன். மூவியை பார்த்துட்டு என் சட்டையை ‘பாங்க்’ பண்ணி இன்னையோட அஞ்சாவது நாளாகிறது. ஏன் அப்படீன்னு கேட்டீங்கன்னா, ஒரு கட்டத்தில் நான் யோசிச்சது ஒன்னே ஒண்ணு தான். நாம கேங்ஸ்டரிஸத்துக்குள்ளே கழுத்த அறுத்து கிட்டு இருக்கோம். பார்த்தீங்கன்னா, அந்த மூவிலே சொன்ன மாதிரி, நம்ம நாட்ல சபா மற்றும் சரவாக்கையும் சேர்த்து 49 கேங்ஸ்டரிஸம் இருக்கு, அதுக்கு எல்லாம் தலைமை சைனீஸ் தான். நாம எல்லாம் கூலிப்படை தான். இது எல்லாருக்கும் தெரிந்தது தான்.

ஆனால் பணம் சம்பாதிப்பது தான் ப்ராளம் என்பதால், எதுக்கு கஷ்டப்பட்டு வேலை செய்யனும் என்றும்கேங்ஸ்டரிஸதுக்குள் நுழைந்து விடுகிறோம். ஆயுள் 40 வருடம் தான் ஒருத்தன வெட்டினா, கொன்றால் நல்லா காசு கிடைக்குது. நல்ல வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணம் பெருகி விட்டது. ஆனால் ஒன்னு கேங்க்ஸ்டரிஸத்தில் வாழ்க்கை 40 வருடம் கூட இல்லை. யாராவது நம்மளையும் போட்டுடுவாங்க அன்னைக்கு மாதிரி இல்லாமல் இன்னைக்கு கட்டையில் (கபாலி படத்தில் துப்பாக்கியை கட்டை என்று குறிப்பிடப்பட்டிருக்கும்) வந்து நிக்குது. சுட்டுக் கொல்லும் நிலைமையில் நிக்குது.

அதனால் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சட்டையை பாங்க் பண்ணிய நான் சொல்கிறேன். இந்த கேங்ஸ்டரிஸத்தில் இருந்தீர்கள் என்றால் வாழ்க்கை முப்பதிலிருந்து நாற்பது கூட இல்லை. நாற்பது வயசுக்குள் எப்படியும் கொன்று விடுவார்கள் என்பதுடன் அவருடைய ஆடியோ முடிகிறது.

யார் இந்த சட்டைக்காரன் என்ற விவரங்களோ, படமோ வீடியோவில் இல்லை.. அவருடைய பேச்சு நிஜமான கேங்ஸ்டர் போலத்தான் இருக்கிறது. மலேசியத் தமிழர்களுக்கு பரிச்சயமான குரல் தானா? இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்ற கேள்விகளும் எழத்தான் செய்கிறது.

-இர தினகர்

tamil.filmibeat.com