மல்லுக்கட்டும் ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி: ஆளுநர் முன் உள்ள 5 வாய்ப்புகள் என்ன?

pann_edappadiசென்னை: முதல்வர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மல்லுக்கட்டும் நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளேன்; அதனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வாய்ப்பு தர வேண்டும் என்பது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை. அதிமுகவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் தம்மையே சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்; ஆகையால் தம்மைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கை.

அதிமுகவினர் இப்படி இரண்டாக பிளவுபட்டு முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார்? என்ன முடிவை மேற்கொள்வார்? என்கிற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்க்கு வாய்ப்பு

தற்போதைய நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தம்முடைய பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க உத்தரவிடவும் வாய்ப்பு உள்ளது. இதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டலாம்.

இருவருக்கும் வாய்ப்பு

இதற்கு அடுத்ததாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரையுமே ஒரே நேரத்தில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம். இதன் பின்னர் இறுதி முடிவெடுக்கலாம்.

எடப்பாடியை அழைக்கலாம்

மூன்றாவதாக எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று அவருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கலாம்; அப்போது ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் அவருக்கு ஆளுநர் உத்தரவிடலாம்.

திமுகவிடம் கேட்கலாம்

நான்காவதாக அதிமுக இப்படி இரு அணிகளாக பிளவு பட்டிருப்பதால் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிடம் ஆட்சி அமைக்க விருப்பமா என கேட்கலாம். அப்படி திமுக ஒப்புக் கொண்டால் பெரும்பான்மையை நிரூபிக்க திமுகவுக்கு ஆளுநர் உத்தரவிடவும் வாய்ப்புள்ளது.

சட்டசபை முடக்கம்- பின்னர் கலைப்பு

ஐந்தாவதாக சட்டசபையை முடக்கி வைத்து தற்போதைக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம். 6 மாதங்களுக்கு பின்னர் சூழ்நிலையைப் பொறுத்து புதிய ஆட்சிக்கான வாய்ப்பு கொடுத்து பெரும்பான்மையை நிரூபிக்கலாம். அல்லது சட்டசபையை அப்போது கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்தலாம். இவைதான் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்பு உள்ள வாய்ப்புகளாக கருதப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: