அம்னோ-பிஎன் ஃபோரெக்ஸ் விளக்கக் கூட்டத்தில் பேசுவதற்குத் தயார் : கிட் சியாங் அறிவிப்பு

kit1990-களில்   பேங்க்  நெகாராவின்   வெளிநாணயச்   செலாவணி   பரிவர்த்தனையில்   ஏற்பட்ட   இழப்புகளைப்  புலனாய்வு    செய்யும்   சிறப்புப்  பணிக்   குழு   குறித்து   விளக்கமளிக்க    அம்னோ- பிஎன்   ஏற்பாடு   செய்துள்ள     விளக்கக்   கூட்டத்  தொடரில்   பேசுவதற்கு   லிம்   கிட்   சியாங்   முன்வந்துள்ளார்.

“(அம்னோ  தகவல்   தலைவர்)  அனுவார்  மூசா   அடுத்த    48-மணி  நேரத்துக்குள்   எனக்குத்    தெரியப்படுத்த     வேண்டும்.  அப்போதுதான்   சனிக்கிழமை   அந்த   விளக்கக்  கூட்டத்  தொடரின்   தொடக்க    விழாவில்   பேசுவதற்குத்   தோதாக    என்   நிகழ்ச்சித்   திட்டத்தைத்   திருத்தி   அமைத்துக்  கொள்ள  முடியும்”,  என   அந்த   டிஏபி   மூத்த  தலைவர்    ஓர்    அறிக்கையில்   கூறினார்.

பணிக்குழு   அமைக்கப்பட்டதற்குக்  குறைகூறல்கள்     எழுந்திருப்பதை     அடுத்து     பணிக்குழு    ஏன்   அவசியமென்பதை   விளக்க   விளக்கக்  கூட்டங்கள்    நடந்த   வேண்டியது    அவசியமாகிறது   என   அனுவார்  நேற்று   கூறினார்.

முதலாவது   விளக்கக்  கூட்டம்   வரும்   சனிக்கிழமை   ஹுலு    சிலாங்கூரில்   நடைபெறத்   திட்டமிடப்பட்டுள்ளது.

லிம்  ஏற்கனவே  பேங்க்  நெகாரா  ஃபோரெக்ஸ்  இழப்பு  குறித்து   விசாரணை   செய்யும்  குழுவில்   பங்கேற்க    தயார்   என்று    அறிவித்திருந்தார்     என்பது   குறிப்பிடத்தக்கது.

“பேங்க்  நெகரா   ஃபோரெக்ஸ்  இழப்பு  குறித்து  விசாரணை    செய்யும்   குழுவில்   பங்கேற்க    நான்   தயார்.  ஆனால்,  அவ்விசாரணை   பேங்க்    பூமிபுத்ரா  நிதி  நிறுவனம்,  1எம்டிபி   ஊழல்     ஆகியவற்றையும்   உள்ளடக்கும்   வகையில்   விரிவுபடுத்தப்பட     வேண்டும்”,  என்று    அவர்   கூறினார்.