இழுத்தடிக்கப்பட்டு வரும் இலங்கையின் போர்க்குற்றங்கள்

WarCrime1ஜெனீவாவில் நடை பெற்று வரும் சர்வதேச மனித உரிமையின் 34வது கூட்டத் தொடரில் இலங்கை மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் பெற்று விட்டன.

1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் ஜே ஆர் ஜெயவர்த்தனா முதல் மகிந்தர் வரை இலங்கைத்தீவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன.

அதிலும் விசேடமாக மகிந்தர் காலத்தில் ஒரு மிகக் குறுகிய காலத்தில் இறுதி யுத்த தாக்குதலில் திட்டமிட்டு சுமார் 1 லட்சம் மக்கள் கொத்தணி குண்டுகள் மூலம் தாக்கப்பட்டு அரை கால் முக்கால் உயிரோடு புதைக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன.

பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்படும் சம்பவமானது கொலனித்துவ காலத்திலிருந்து இடம்பெற்று வருகிறது.

அதாவது இலங்கை பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த போது தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்பினருக்கு பிரித்தானியாவால் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டன.

சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

இதனால் கல்வி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தமிழ் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன் உத்தியோகபூர்வ அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்புக்களும் தமிழ் மக்களுக்குப் புறக்கணிக்கப்பட்டன.

1983ல் தமிழ் மக்களுக்கு எதிரான அரச ஆதரவுப் படுகொலை இடம்பெற்றது. இதன் காரணமாக கொழும்பு மற்றும் தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் வடக்கில் தஞ்சம் புகுந்தனர். மற்றும் பெருமளவு தமிழர்கள் வெளிநாடுகளில் இடம் பெயர ஆரம்பித்தார்கள்.

1983ம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் டயஸ்போரா என்ற ஒரு பெரும் சக்தி கொண்ட ஈழத்து தமிழர்கள் பலம் பெற ஆரம்பித்தார்கள்.

ஜே ஆர் காலத்தில் பலம் பெற்ற ஈழம் யுத்தம் 2009ல் முடிவுற்ற போது அதில் ஒரு லட்சம் வரையான தமிழ்ப் பொதுமக்களும் தமிழ்ப் புலிகளும் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளது.

இவ்வாறான போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு அனைத்துலக சமூகம் பல்வேறு பலமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.

குறிப்பாக ஐ.நா தலைமையில் அனைத்துலக நீதிமன்றால் இப்போர்க் குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டன.

போர்க் குற்றச்சாட்டில் அரசுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியா இதற்கு எதிராக சிங்கள தேசியவாதிகளால் பல்வேறு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, அவுஸ்திரேலியாவும் இப்பரப்புரையில் இணைந்து கொண்டது.

சிறிலங்காவிலிருந்து தனது நாட்டிற்கு படகுகள் மூலம் வந்தடையும் புகலிடக் கோரிக்கையாளர்களை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது அவுஸ்திரேலியாவின் நோக்காகும்.

ஆகவே சிறிலங்காவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அத்தகைய ஆபத்து நிறைந்த நாட்டிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்ப முடியாது.

ஆகவே இதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமானது சிறிலங்காவிற்கு ஆதரவாக நேரடியாகப் பரப்புரையில் ஈடுபட்டது.

மகிந்த ராஜபக்சவுடன் முன்னாள் அவுஸ்ரேலியப் பிரதமர் ரொனி தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை என்கின்ற தனது கோட்பாட்டை மறைப்பதற்கான முழு ஆதரவை ராஜபக்ச அரசாங்கம் அவுஸ்திரேலியாவிலிருந்து பெற்றுக் கொண்டது.

சிறிலங்காவிலிருந்து படகுகள் மூலம் தமிழ் மக்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக சிறிலங்காவின் காவற்துறை மற்றும் கடற்படையினருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவியது.

ஆனாலும் அவுஸ்திரேலியாவிலிருந்து சட்டத்திற்கு முரணாகத் திருப்பி அனுப்பப்படும் தமிழ் மக்கள் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

ஆட்கடத்தல்களில் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்சவே ஈடுபடுவதாக அறிந்த போதிலும், அவுஸ்திரேலியாவிற்கு படகுகளில் செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்துவதற்காக சிறிலங்கா கடற்படையினருக்கு ரோந்துப் படகுகள் வழங்கப்பட்டன.

குறித்த சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் இவ்வாறான சித்திரவதைகளை நியாயப்படுத்தலாமே ஒழிய இது தொடர்பில் வெளிவந்துள்ள அறிக்கை அசாதாரணமானது என 2013ல் சிறிலங்காவிற்கு வருகை தந்த போது அவுஸ்திரேலியப் பிரதமர் ரொனி அபோற் தெரிவித்தார்.

சிறிலங்காவில் பல்வேறு சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான சகல சாட்சியங்களும் உள்ள போதிலும், தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார நோக்கிற்காகவே இவ்வாறு சட்டரீதியற்ற வகையில் நாட்டிற்குள் உள்நுழைவதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பொப் கார் தெரிவித்திருந்தார்.

இது போன்றே இவரைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்த ஜூலி பிசப்பும் தெரிவித்திருந்தார்.

சிறுபான்மைத் தமிழ் மக்களே சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமானவர்கள் என்பதே அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் நிலைப்பாடாக இருந்துள்ளது.

சிங்களவர்கள் யுத்தத்தை வென்றுள்ளனர் எனவும், நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது அத்துடன் இதனைத் தமிழ் மக்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் அவுஸ்திரேலியாவின் கோட்பாடாகக் காணப்படுகிறது.

அதாவது வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு நிலவுகிறது, தமிழ் மக்களின் நிலங்கள் சிங்கள இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன, தமிழ் மக்களின் கல்லறைகள் அழிக்கப்பட்டுள்ளன, தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், தமிழ் மக்கள் நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இவ்வாறான பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்ற போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை தமிழ் மக்கள் ஏற்றேயாக வேண்டும் என்பதே அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் நிலைப்பாடாகக் காணப்படுகிறது.

சிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணை 2013ல் பிறேமனில் இடம்பெற்ற போது அதில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் திட்டமிட்ட படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றும் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை தொடர்வதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த விசாரணையின் போது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதாவது தமிழ் ஆயுதக் குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை, இவர்கள் மிகத் தீவிர காயங்களுக்கும் மன வடுவிற்கும் உள்ளாகியமை போன்றன நிரூபிக்கப்பட்டன.

அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கமானது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு அனுமதிக்கப்படும் என 2015ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

எனினும், அனைத்துலக விசாரணையை எதிர்த்து சிறிலங்காவிற்குள் அழுத்தம் அதிகரித்து வருவது தொடர்பாக அதிபர் சிறிசேன பதிலளித்திருந்தார். அதாவது மனித உரிமைகள் பேரவையின் அனைத்துலக சமூகத்தை உள்ளடக்கிய போர்க் குற்றச்சாட்டு விசாரணையைத் தான் நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டேன் என சிறிசேன தெரிவித்திருந்தார்.

ஐ .நா ஆணையர் கருத்து இந்த விசாரணை இடம்பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் இதன் மூலம் சிறிலங்கா தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியும் எனவும் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் 2016 மார்ச் மாதம் சிறிலங்காவிற்கு வருகை தந்த போது தெரிவித்திருந்தார்.

ஐ.நா வின் இத்தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கான எவ்வித நிர்ப்பந்தத்தையும் சிறிலங்கா மீது அவுஸ்திரேலியா வழங்கவில்லை. படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த இலங்கையர்கள் அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவர் என 2016 ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டற்றோன் கட்டளையிட்டிருந்தார்.

இப்போது நடை பெற்று வரும் ஜெனீவா மாநாட்டில் இலங்கையின் போர்க்குற்றம் பற்றி எந்தவொரு நாடும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை .காரணம் இலங்கை போர்க்குற்றம் பற்றிய விசாரணையை எடுத்து செல்லக் கூடிய எந்தவொரு அழுத்தமும் பலம் பொருந்திய நாடுகளால் இலங்கை மீது வைக்கப்படவில்லை.

தமிழ் டயஸ்போராக்கள் வாழும் நாடுகளில் இருந்து அழுத்தங்கள் அதிகரிக்கப்படவில்லை..இப்படியே சிங்களத்தின் போர்குற்றங்கள் மறைக்கப்பட்டு விடலாம் .?ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்து வரும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஒட்டாவா உடன்பாடு என்று அழைக்கப்படும், கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் 160 நாடுகள் அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.

காலம் சென்ற பிரித்தானிய இளவரசி கம்போடியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் கண்ணி வெடிகளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தார்..பிரித்தானியா தயாரித்துக் கொண்டிருந்த தரைக் கண்ணி வெடிகளுக்கு எதிரான பயணத்தை ஆரம்பித்தார்.

இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த வருடம் மார்ச் மாதம் அனுமதி அளித்திருந்தது.

எனினும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இன்னமும் இதற்கு பச்சைக்கொடி காண்பிக்கவில்லை. கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி,

இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும்.

இந்த உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாமல் இருப்பதற்கும், நல்லிணக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அனுமதி அளித்தும் பாதுகாப்பு அமைச்சு இன்னும் மறுத்து வரும் மர்மம் என்ன? இதன் பின்னால் இருப்பது என்ன ?

-http://www.tamilwin.com

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் ஒருவரால் வழங்கப்பட்டு 25 Mar 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

TAGS: