போருக்கு ஆயத்த நிலையில் ராணுவம்: வடகொரியாவை எச்சரித்த தென் கொரிய ஜனாதிபதி

south korea1வட கொரியாவுடன் எல்லை பகுதியில் ராணுவ மோதல்கள் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது என தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் எச்சரித்துள்ளார்.

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக கடந்த வாரம் மூன் ஜே இன் பொறுப்பேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் அவர் மக்களுக்கு ஆற்றிய உரையில், கொரிய தீபகற்பத்தின் அமைதிக்காக எதையும் செய்வேன் என கூறியிருந்தார்.

இதனிடையே தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இன்று வருகை தந்த அவர், வட கொரியாவின் ஆத்திரமூட்டும் வகையிலான செயல்கள் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை ஒருபொழுதும் தாம் ஏற்று கொள்ளப் போவதில்லை என கூறினார்.

அவர், தனது ராணுவ வீரர்களை போரினை எதிர்கொள்ளும் நிலையில் தயாராக இருக்கும்படி அவசர உத்தரவிட்டுள்ளார்.

இரு கொரிய நாடுகளையும் பிரிக்கும் சர்ச்சைக்குரிய மேற்கு கடலோர எல்லை பகுதிகளில் ராணுவ மோதல்கள் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது என்ற உண்மை நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவுடன் சுமுக அணுகுமுறையை மேற்கொள்ள விரும்புபவரான மூன் பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் அந்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கருதினார்.

ஆனால், கடந்த ஞாயிற்று கிழமை வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது. செங்குத்தான கோணத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 2000 கிலோ மீற்றர் உயரத்துக்கு சென்றது. கிட்டத்தட்ட, 700 கிலோ மீற்றர் தூரத்துக்கு பயணித்து ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.

புதிதாக பேலிஸ்டிக் ராக்கெட்டை உருவாக்கிய தங்களின் திறமையை பறைசாற்றவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

இந்த சோதனையை தொடர்ந்து, வடகொரியா தனது செயல்களை மாற்றி கொண்டால் ஒழிய பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என மூன் கூறியுள்ளார்.

சமீப வாரங்களில், அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பதற்ற சூழ்நிலை நிலவி வந்தது. வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு வாய்ப்பு ஆக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து வந்தது

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியாவும் அச்சுறுத்தி வந்தது.

ஏவுகணையுடன் இணைத்து அனுப்புவதற்கான சிறிய போர் கருவிகளை தயாரிக்கும் ஆற்றல் வடகொரியாவிடம் இருப்பது என்பது சந்தேகத்திற்குரிய நிலையில், அணு ஆயுதத்தினை ஏந்தி செல்லும் திறனை ஏவுகணை கொண்டுள்ளது என அந்நாடு தெரிவித்தது.

இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனையை தொடர்ந்து அந்நாடுடன் எல்லை பகுதியில் ராணுவ மோதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ளது என தென்கொரிய ஜனாதிபதி மூன் எச்சரிக்கை செய்துள்ளார்.

-lankasri.com