சசிகலா குறித்த காணொளிகள் பெண் காவலர் மூலம் வெளியாகியது!

sasikalaபெங்களூர் சிறையில் சசிகலாவின் வீடியோ காட்சிகளை பெண் காவலர் ஒருவர் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா சிறையில் வசதிகளுடனும் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியமை குறித்து விசாரணை நடத்துவதற்காக கர்நாடக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட உளவுப் பிரிவு விசாரணைகளிலிருந்து மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா தங்கியுள்ள அறையை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரே இந்த வீடியோவை பதிவு செய்துள்ளதாகவும், அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரூபா அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையிலான வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

குறித்த வீடியோ காட்சிகளில் கையில் துணிப்பையுடன் சசிகலா நடந்து செல்வதும், அவருடன் சிறை அதிகாரி அனிதாராய் மற்றும் இளவரசி ஆகியோர் நடந்து வரும் காட்சியும் பதிவாகியிருந்தது.

அதுபோன்று, சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் உள்ள அடுப்பு, பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள், துணிப்பைகள் ஆகியவையும் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதுதவிர, சுடிதார் அணிந்தவாறு தோளில் பை ஒன்றுடன் சசிகலா சிறை வளாகத்தில் நடந்து செல்வது போன்றும் அவரை கைதிகள் வேடிக்கை பார்ப்பது போன்றதுமான காட்சிகளும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: