14-வது பொதுத் தேர்தலில், ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் கைக்குலுக்கும் சாத்தியம் உண்டா?

Slide1முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தியை, இன்று பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷனில் சந்தித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப் அமைப்பு, பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.

“ஹராப்பான் கூட்டணியில் இந்திய சமூகத்திற்குச் சரியான பிரதிநிதித்துவம் இல்லையென நாங்கள் அறிகிறோம். அக்கூட்டணியில் இந்தியர் கட்சி இல்லை. இந்தியர்கள் உறுப்பினராக இருக்கும் பல்லினக் கட்சிகள்தான் இருக்கின்றன, ஆனால் அவற்றில் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை.”

“டாக்டர்கள், வக்கீல்கள் என்றில்லாமல், சாதாரணத் தோட்ட மக்களின் ஆதரவை ஹிண்ட்ராப் பெற்றிருப்பதை எண்ணி, உண்மையில் நாங்கள் பாராட்டுகிறோம்.”

ஆக, ஹிண்ராப்ட் அமைப்பைச் சேர்த்துகொள்ள நாங்கள் முயற்சிக்கிறோம், ஹராப்பானின் உறுப்பினராக இல்லையென்றாலும் கூட, எதிர்க்கட்சியின் ஒரு பகுதியாகவாவது ஹிண்ட்ராப் இருக்க வேண்டும்,” என மகாதீர் கூறியுள்ளார்.

14-வது பொதுத் தேர்தலில், தோட்டப்புற இந்தியர்களின் வாக்குகளைப் பெற ஹிண்ட்ராப் உதவுமென தான் நம்புவதாக மகாதீர் கூறினார்.

2007 ஆம் ஆண்டில், இந்து கோயில்கள் உடைப்பு மற்றும் இந்தியர்களின் சமூகப் பொருளாதார நிலைமை Slide2குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தெருவில் இறங்கிப் போராட, ஹிண்ட்ராப் இயக்கமே முக்கியக் காரணம்.

அப்பேரணியைத் தொடர்ந்து, பொ.உதயக்குமார் உட்பட, ஹிண்ட்ராப் முக்கியத் தலைவர்கள் அனைவரும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐ.எஸ்.ஏ) கீழ் கைது செய்யப்பட்டு, 2009-ம் ஆண்டில்தான் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தக் காலக்கட்டத்தில், பிரிட்டனுக்குச் சென்ற வேதமூர்த்தி, மலேசிய இந்தியர்களின் இந்நிலைக்குப் பிரிட்டன் அரசுதான் காரணம் எனக்கூறி, பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, ஹிண்ட்ராப்பின் தலைமைதுவத்தில் உதயகுமார் மற்றும் வேதமூர்த்திக்கு இடையேச் சர்ச்சை உண்டானது.

2012-ம் ஆண்டு, நாடு திரும்பிய வேதமூர்த்தி, மலேசிய ஹிண்ட்ராப் இயக்கத்தை முறையாகப் பதிவு செய்தார்.

Slide313-வது பொதுத் தேர்தலில், பிரதமர் நஜிப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வேதமூர்த்தி கையெழுத்திட்டார்.

ஹிண்ட்ராப்பின் இந்தியர்களுக்கானப் பெருந்திட்டத்தை நஜிப் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, வேதமூர்த்தி தனது முழு ஆதரவைப் பாரிசான் நேசனலுக்கு வழங்கியதோடு, அனைத்து இந்தியர்களையும் பாரிசானுக்கு வாக்களிக்கச் சொல்லி பிரச்சாரமும் செய்தார்.

தேர்தலில் பாரிசான் வென்றதை அடுத்து, வேதமூர்த்தி பிரதமர் துறை அமைச்சில் துணை அமைச்சராகப் பதவியில் அமர்த்தப்பட்டார்.

எனினும், வாக்குறுதி அளித்ததுபோல் அரசாங்கம் நடந்துகொள்ளவில்லை எனும் காரணத்திற்காக, 2014-ல் வேதமூர்த்தி தனது துணை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.